சிதம்பரம் நடராசர் கோவிலில் தீட்சிதர்களின் ஆட்சியா? அரசாங்கத்தின் ஆட்சியா?

சிபிஐ(எம்எல்) அறிக்கை

விசுவ இந்து பரிசத் மதுரையில் நடத்திய அகில பாரத துறவியர் மாநாட்டில் "தமிழ்நாடு அரசாங்கம் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் " என்ற தீர்மானத்திற்கு அடிபணிந்து தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது; சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது." எனவும்"ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது" எனவும் அறிவித்தார். தமிழ்நாடு அரசாங்கத்தின் இத்தகைய அடிபணிந்து போகும் சரணாகதி போக்கு தீட்சிதர்களின் அராஜகத்தை மேன்மேலும் அதிகரித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் நிதி முறைகேடுகள் மீது புகார் எழுந்ததால்… நேற்று அதுகுறித்து விசாரிக்க, நடராசர் கோயிலில் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறையினர் சென்றனர்; கோயில் நிர்வாக கணக்கு விவரங்களை தீட்சிதர்கள் தர மறுத்ததோடு, ஆய்வு நடத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்க முடியாது என விவாதம் செய்து அறநிலையத் துறையினரை வெளியே அனுப்பினர். தீட்சிதர்கள் தமிழ்நாடு அரசுக்கு - சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி நிர்வாகத்திற்கு மேலானவர்கள் என்ற சனாதான பார்ப்பனீய மேட்டிமைத் தனத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர். இது ஒன்றும் புதியது அல்ல!

கடந்த 15.2. 2022 அன்று சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள் கடவுளை வழிபடச் சென்ற ஜெயசீலா என்ற தலித் பெண் ஒருவரை சாதீய வன்கொடுமைக்குள்ளாக்கினர்; 20 தீட்சிதர்கள் அவரை மறித்து உள்ளே போகவிடாமல் தடுத்ததுடன், அவரின் சாதியைச் சொல்லி இழிவாகவும் பேசினர். 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் தீட்சிதர்கள் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளி தீட்சிதர்களின் பெயர்கள் கூடப் பதிவு செய்யப்படவில்லை. இதேபோல, 2019-ல் தனது மகனுக்கு அர்ச்சனை செய்யச் சென்ற லதா என்ற 53 வயது பெண்மணியை தீட்சிதரிடம் கேள்வி கேட்டதற்காக அவரது கன்னத்தில் ஒரு தீட்சிதர் அறைந்து விட்டார்; வழக்குப் பதிவு செய்யப்பட்டும் அவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை.

பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, பக்தர்களை தாக்குவது, தட்சணையை பிரிப்பதில் தீட்சிதர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு தீட்சிதர் கொல்லப்பட்ட வழக்கு, கே.ஆடூர் செல்வராஜ் என்பவரை, நிலத்தரகர் ராயரை தீட்சிதர்கள் கொன்ற வழக்குகள் எனப் பல்வேறு கிரிமினல் குற்றங்கள் உள்ளன. ஆனால், யாரும் கைதாகவில்லை.

2000-ம் ஆண்டில் சிவனடியார் ஆறுமுகசாமியைத் தீட்சிதர்கள் தாக்கிய வழக்கில் அத்தனை தீட்சிதர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட, சிற்றம்பல மேடையிலேறி தமிழில் பாடும் உரிமையை தடுக்க, கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி பக்தர்கள் சிற்றம்பல மேடை ஏறுவதற்கு தடைவிதித்து தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடை ஏறி வழிபடக்கூடாது என எழுதப்படாத விதியை தொடர்ந்து செயல்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவல்லாமல், பல்வேறு நிதி முறைகேடுகள் தில்லை நடராசர் கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுமார் 2,700 ஏக்கர் நிலம் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கட்டிடங்கள், நகர்ப்புற சொத்துக்கள் உள்ளன. சுமார் 400 தீட்சித பார்ப்பனர்கள் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளதுடன், அவர்களின் சொத்தாகவே மாற்றப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராசர் கோவில் விசயத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தமிழ்நாடு அரசு நிலை நாட்டிட வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு பின்வரும் உறுதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என சிபிஐ-எம்எல் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

  1. தீட்சிதர்களால் அவமானப்படுத்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க, தீட்சிதர்கள் மீது போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் குற்றவாளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும்.
  2. சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு வாசல் நந்தனார் நுழைந்த வாசல் என்பதால் நீண்டகாலமாக சுவர் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. அத்தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்றி தெற்கு வாசல் பக்தர்களுக்காக திறக்கப்பட வேண்டும்.
  3. அனைத்து சாதி மக்களும் எவ்வித வேறுபாடோ பாரபட்சமோ இன்றி சுதந்திரமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடு செய்வது இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கும் உரிமையாகும்; அந்த உரிமை சிதம்பரம் நடராசர் கோவிலிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  4. அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் சிதம்பரம் நடராசர் கோவில் இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாதது ஆகும். எனவே, உடனடியாக சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.மேலும், சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திட, சட்டமன்றத்தில் ஒரு தனிச் சட்டம் இயற்றிட வேண்டும்.
  5. தில்லை நடராசர் கோவிலில் இதுவரை தீட்சிதர்கள் நடத்திய அனைத்துவகை முறைகேடுகள் பற்றியும் நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! தீட்சிதர்கள் சாம்ராஜ்யம் முடிவு கட்டப்பட வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை

மாநில கமிட்டி, தமிழ்நாடு.