கல்வி தனியார்மயமும் காவிமயமும் மாணவர்களைக் கொல்லும்!

மீண்டும் ஒரு மாணவியின் மர்ம மரணம். கன்னக்குரிச்சி மாவட்டம் சின்னச்சேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். மாடியில் இருந்து விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை. ஆனால், மாணவியின் தலையில் இரத்தம் உறைந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டுகளில் விடுதிச் சுவர்களில் இரத்தம் காணப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மாடியில் இருந்து விழுந்தவர் உடலில் எந்த எலும்பு முறிவும் இல்லை.