பல்வேறு நாடுகளிலுமுள்ள பாசிசங்கள் அனைத்தும் ஜெர்மானிய நாஜிசத்தைத் தம் முன்மாதியாகக் கொண்டிருந்தாலும் அதன் முழு அச்சு வார்ப்பாக இந்திய பாசிசம் மட்டுமே இருப்பதாகக் கருதலாம்.

அவற்றின் ஒத்த தன்மைகளை இங்கு பார்ப்போம்:

1. ஜெர்மன் நாஜிகள் ஆரிய இனத்தின் மேன்மையை நிறுவ முயன்றனர். இந்திய நாஜிகளான சங் பரிவாரத்தினரோ 'இந்துக்களின் மேன்மை' என்ற பெயரில் பார்ப்பனர்களின் மேலாண்மையை முழுமையாக நிறுவப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் பொருட்டு 'ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களல்லர், மாறாக இந்தியாவின் பழங்குடிகள்' என்ற கருத்தை நிறுவுவதற்காக தங்கள் வழக்கமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். அந்த மூட்டைகளிலிருந்து வெளிவந்த சில இந்தியப் பார்ப்பன ‘ஆராய்ச்சியாளர்களும்', சங் பரிவாரத்தின் மீது மோகம் கொண்டுள்ள ஓரிரு வெளிநாட்டு 'ஆராய்ச்சியாளர்களும்', ஆரியர்கள் தான் சிந்துவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தனர் என்று மெய்ப்பிப்பதற்காகக் களமிறங்கினர். அதாவது அவர்களது ஆராய்ச்சிக் களம் என்பது கணினியும் கணினித் தொழில் நுட்பமும்தான்! அவற்றைக் கொண்டு சிந்துவெளி நாகரித்தில் காணப்படும் எருது சின்னத்தை குதிரையாகக் காட்ட முனைந்து படுதோல்வி அடைந்தனர் என்றாலும் ஆரியர்கள் இந்திய மண்ணைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை 'மெய்ப்பிக்கும்' பல கட்டுரைகளும் நூல்களும் சங் பரிவார 'ஆராய்ச்சி' முகாமிலிருந்து வந்துகொண்டு தான் இருக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்துத்து வத்தின் பிதாமகன் வி.டி.சாவர்க்கர் 1923இல் வெளியிட்ட 'இந்துத்துவா அல்லது இந்துக்கள் யார்? (Hindutva or Who is a Hindu) என்ற நூலில் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து சிந்து நதிக்கரைப் பகுதிக்கு வந்தனர் என்றும் உலகின் மிகப் பழைமை யான நாகரிகங்களிலொன்று எனச் சொல்லப்படும் பாபிலோனிய நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே ஆரிய வேத ரிஷிகளின் யாகப் புகைகள் வானை நோக்கி எழுந்து கொண்டிருந்தன என்றும் சிலாகிக்கிறார். வடமேற்கு இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்ற ஆரியர்களோடு சேர்ந்து அவர்களது பண்பாடும் பரவியது என்றும், ஆரியரல்லாத மக்கள் அங்கு இருந்தபோதிலும் அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் இரத்தக் கலப்பு ஏற்பட்டு இந்து தேசம் உருவாகியது என்றும் சாவர்க்கர் கூறுகிறார். ”இந்து பூர்வீகத்துடன் தொடர்புடையவர்கள் அனைவருடனும் தனக்கு இரத்த உறவு இருக்கிறது என்று கருதுபவனும் வடக்கே சிந்து நதி முதல் தெற்கே இந்து மாக்கடல் வரை உள்ள பகுதியே இந்தியா என்று ஒப்புக் கொள் பவனும் இந்தியாவை ஒரு தெய்விக பூமி அல்லது புனித பூமி என்று கருதுபவனுமேதான் இந்து ஆவான்” என்றும், இந்த இந்துக்கள் யாவரும் ஒரே மரபினம் (race) என்றும் இந்த நூலில் கூறுகிறார் சாவர்க்கர்.

சங் பரிவாரத்தின் ஆன்மிகக் குருக்களுக்கும் குருவாகக் கருதப்படும் எம். எஸ். கோல்வால்கர், "நாம், அல்லது நமது தேசத்தன்மையை வரைய(We, or our Nationhood Defined) என்ற நூலில் உலகில் எந்தவொரு மாபெரும் அறிவியலாள ராலும் கண்டுபிடிக்க முடியாத 'அறிவியல் கண்டுபிடிப்பை முன்வைக்கிறார்: "இந்துக்கள் அல்லது ஆரியர் களாகிய நாம் முதலில் வட துருவப் பிரதேசத்தி லிருந்து வந்தவர்கள் என்ற கோட்பாட்டை லோக் (மான்ய) திலகர் முன்வைத்தார். அதாவது ஆரியர்கள், அதாவது இந்துக்கள் முதலில் வட துருவப் பிரதேசத்தில் இருந்தார்கள் என்று அவர் கூறுவதை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவருக்குத் தெரியாமல் போனது என்னவென்றால் தொன்மைக் காலத்தில் வடதுருவ முனையும் துருவப் பிரதேசமும் இன்றுள்ள இடத்தில் இருந்திருக்க வில்லை என்பதுதான். நாம் அறிந்து கொண்டது என்ன வென்றால் வட துருவப் பகுதி ஓரிடத்தில் நிலையாக இருந்ததில்லை; மிக நீண்டகாலத்திற்கு முன்பு அது இன்றைய பிகாரிலும் ஒரிஸ்ஸாவிலும் இருந்தது; பிறகு வடகிழக்குத் திசை நோக்கிச் சென்றது; அதன் பின்னர் வளைந்து வளைந்து மேற்குத் திசையிலும் வடக்கு திசையிலும் சென்று, இப்போதுள்ள இடத்தை அடைந்தது. அப்படி யானால் நாம் துருவப் பிரதேசத்தை விட்டு இந்துஸ்தானத்துக்கு வந்துவிட்டோமா அல்லது நாம் எப்போதுமே இங்கேதான் இருந்திருக்கிறோமா, துருவப் பிரதேசம்தான் நம்மை விட்டு வளைந்து வளைந்து வடதிசை நோக்கிச் சென்றுவிட்டதா? இந்த உண்மை லோக் திலகரின் காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டிருந்தால், வேதங்களில் சொல்லப் படும் துருவப் பிரதேசம் இந்துஸ்தானத்திலேயே இருந்தது, இந்துக்கள் அங்கு புலம் பெயர்ந்து செல்லவில்லை, மாறாக இந்துக்களை இந்துஸ் தானத்தில் விட்டுவிட்டு துருவப் பிரதேசம்தான் வளைந்து வளைந்து வட திசையை நோக்கிப் புலம் பெயர்ந்துவிட்டது என்ற கோட்பாட்டை அவர் தயக்கமின்றி முன்வைத்திருப்பார் என்று நம்மால் தயக்கமின்றி உறுதிப்படுத்த முடியும்”

2. ஜெர்மன் நாஜிகளின் கருத்துநிலை (ideology): இழிவுபடுத்துவதையும் பின்னர் அவர்களை ஒழித்துக் கட்டுவதையும் நாஜிகள் தங்கள் அரசியல் கொள்கை யாகவும் பரப்புரையாகவும் கொண்டிருந்தனர் (இன்றைய ஜெர்மன் அரசு நவநாஜிகளான இஸ்ரேலிய ஜியோனிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பது வேறு விடயம்).

இந்திய பாசிசவாதிகளோ இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினரை குறிப்பாக இஸ்லாமி யர்களை இழிவுபடுத்துவதையும் முஸ்லிம் விரோதக் கருத்துகளைப் பரப்புவதையும் தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்டிருப்பதுடன் அவர்களை முற்றிலுமாக இனக்கொலை செய்வதை நியாயப் படுத்தும் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதன் பகுதியாக எண்ணற்ற முஸ்லிம்கள் கொல்லப் பட்டுள்ளனர், அவர்களது இல்லங்களும் கட்டடங் களும் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. அவர்களது வணிகங்களும் வணிக மையங்களும் கடைகளும் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன.

3. ஜெர்மானிய நாஜிகள் கொன்ற விளிம்பு நிலை மக்கள்: மேற்கு, கிழக்கு ஐரோப்பாவிலிருந்த ரோமாக்கள், ஜிப்ஸிகள் எனப்படும் நாடோடி மக்களைக் கொன்று குவித்தனர்.

இந்திய நாஜிகள் தலித்துகளை அடக்கவும் ஒடுக்கவும் அழிக்கவும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

4. ஹிட்லரின் நாஜி அரசின் குடியுரிமைச் சட்டம்: ஜெர்மானியக் குடிமக்கள் பட்டியலிலிருந்து யூதர்களை விலக்கி வைத்தது; அவர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுத்தது.

இந்திய நாஜிகளோ தேசிய மக்கள் பதிவேட்டில் இந்திய முஸ்லிம்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கும் பொருட்டு குடியுரிமைச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். அஸ்ஸாமிலுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு, அவர்கள் அந்த மாநிலத்தில் வாழ்ந்தவர்கள் எனபதற் கான வரலாற்று ஆவணங்கள் இல்லை என்ற காரணம் காட்டி, அவர்களுக்குக் குடியுரிமையை மறுத்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை சிறைகள் போன்ற முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். அதேவேளை வரலாற்று ஆவணங்கள் இல்லாத, அஸ்ஸாமில் குடியேறிகளாக உள்ள பல இலட்சம் இந்துக்களுக்கு அவர்கள் வெளி மாநிலங்களிலிருந்தோ வெளிநாடுகளிருந்தோ வந்தவர்களாக இருந்தாலும் குடியுரிமையை வழங்குகிறார்கள்.

5. ஜெர்மன் நாஜிகளின் இனத் தூய்மைச்சட்டம்: நாஜிகள் 'ஜெர்மானியர்களின் இரத்தம், கௌரவம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் சட்டம்' இயற்றினார்கள்; ஜெர்மானியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே திருமணங்கள் நடப்பதையோ, திருணத்திற்கு வெளியே உறவு கொள்வதையோ தடை செய்தார்கள்.

இந்திய பாசிசவாதிகளோ 'சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் அவசரச் சட்டம் 2020' என்பதை இயற்றினார்கள். அதன் நோக்கம் 'லவ் ஜிஹாத்' என்று அவர்களால் சொல்லப் படுவதைத் தடுப்பதும், இந்துப் பெண்களின் கௌரவத்தைக் காப்பது என்ற பெயரால் இரு மதத்தினரிடையே கலப்புத் திருமணங்கள் நடப் பதைத் தடுப்பதும்தான். அதேவேளை இந்துக்கள் என்று சொல்லப்படுவர்களிடையே நடக்கும் 'ஆணவக் கொலைகளை' தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வர மறுக்கிறார்கள்.

6. ஜெர்மானிய நாஜிகளின் உணவுக் கொள்கை: ஜெர்மன் நாஜிகள் யூதர்கள் இறைச்சிக் காக விலங்குகளை வெட்டும்போது கடைப்படிக்கும் 'கோஷெர்' முறையைத் தடை செய்தனர். அந்த 'கோஷெர்' முறை என்பது, இறைச்சிக்கான விலங்குகளின் கழுத்தை அறுத்து இரத்தம் உடனடியாக வெளியேறும்படி செய்து, அந்த விலங்குகள் விரைவில் மடியும்படி செய்வதுதான். ஏறத்தாழ இதற்கு ஒத்ததும் இஸ்லாமியர்களால் பின்பற்றப் படுவதுமான 'ஹலால்' முறைக்கு எதிராகப் பரப்புரை செய்தனர்.

இந்திய நாஜிகளோ இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, தலித்துகளும் கிறிஸ்தவர்களும் பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலரும் உண்கின்ற மாட்டிறைச் சியை விற்பதையும் உண்பதையும் தடை செய்கின்ற னர். இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச் செல்பவர் களைக் கொடூரமாக வெட்டிக் கொல்கின்றனர். பல இடங்களில் 'ஹலால்' இறைச்சிக் கடைகளை மூடியுள்ளனர்.

அது மட்டுமல்ல, நாம் கவனம் செலுத்தாத இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது அவர் களால் புனிதமானதாகக் கருதப்படும் 'பசு'விற்கு நேரிடும் ஏராளமான சித்திரவதைகள்தான். இந்து மேல் சாதியினரும் சமணர்களும் அதிகம் விரும்பி நுகர் கின்ற பசும்பாலுக்காக நடத்தப்படும் பால் பண்ணைத் தொழிலில், தாய்ப் பசு மாடுகள் கன்று களிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படு கின்றன. அவை காளைக் கன்றுகளாக இருதாலும் சரி, பசுக் கன்றுகளாக இருந்தாலும் சரி. தாய்ப் பாலைக் குடிக்க முடியாத ஏராளமான கன்றுகள் இறந்து போகின்றன. தாய்ப் பசுவின் தாய்மை உணர்வுக்கு ஏற்படும் மன வேதனையை அவர்கள் பொருட் படுத்துவதில்லை. ஏனெனில் அவை வாய் பேசாத பிறவிகளல்லவா? மேலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெர்சி போன்ற பசு மாட்டு வகைகள், நாட்டுப் பசு மாட்டு வகைகள் ஆகிய வற்றின் மூலம் உருவாக்கப்படும் கலப்பினப் பசுக்கள் பல்லாயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவற்றிடமிருந்து அதிக அளவு பாலைக் கறப்பதற்காகவும் செயற்கையாக கரு உண்டாக்கு வதற்காகவும் அவற்றின் ஆயுள்காலத்தைக் குறைக்கின்ற, அவற்றுக்கு சொல்லொணா உடல் துன்பத்தையும் நோய்களையும் ஏற்படுத்துகின்ற ஊசிகள் செலுத்தப்படுவதை அனுமதிக்கிறார்கள். இவர்கள் தான் 'அனாதை மாடுகளுக்கு' கோசாலை நடத்து பவர்களாம்!

7. ஜெர்மன் நாஜிகளின் பரப்புரை சாதனங்கள்: ஜெர்மன் நாஜிகள் கருத்துகளைப்பரப்புவதற்காகவென்றே ஓர் அரசாங்கத் துறையைவைத்திருந்தார்கள். பெரும் கார்ப்பரேட் ஊடகங்களைத் தம் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்திய நாஜிகளோ, தூர்தர்ஷனையும் இந்திய வானொலியையும் தங்கள் பரப்புரைக் கருவிகளாக ஆக்கியுள்ளதுடன், தங்கள் ஆதரவுடன் நடத்தப் படும் தொலைக்காட்சி சானல்கள் முதலிய ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை போக, தொழில் ரீதியாகத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதற் கென்றே பாஜக தன் கட்சியில் ஒரு பிரிவை உருவாக்கியுள்ளது. 'கோடி - மீடியா' என்று சொல்லப் படும் இந்த ஊடகம்தான் சிறுபான்மையினரை அரக்கர்களாகச் சித்திரிக்கவும் இந்துத்துவத்துக்கு ஆதரவாக பொது மக்கள் கருத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படு கிறது. 'நாட்டெல்லை களைக் கடந்த பத்திரிகையாளர்கள் (Reporters Without Borders) என்ற சர்வதேசப் பத்திரிகையாளர் அமைப்பு, ஊடக சுதந்திரத்தைப் பொருத்த வரை, ஓயாத உள்நாட்டு சண்டைகளும் இனக் கொலைகளும் நடக்கும் சோமாலியா, போதைப் பொருள் வணிகத்தில் தலைசிறந்து விளங்குவதும் போதைப் பொருள் மாஃபியாக்கள் ஆதிக்கம் செலுத்துவதுமான கொலம்பியா ஆகிய நாடுக ளுக்குக் கீழே, இந்தியா தர வரிசைப் பட்டியலில் 161ஆம் இடத்திலுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. பாடத்திட்டங்கள் மாற்றப்படு கின்றன, அவற்றில் காந்தியைக் கொலை செய்த வனின் பெயர் மறைக்கப்படுகிறது, மொகலாய மன்னர்கள் மிகவும் இழிவாக சித்திரிக்கப்படுகின்றனர்; ஜெர்மானிய நாஜிசம், இத்தாலிய பாசிசம் ஆகியவற்றைப் புகழ்ந்து தள்ளுவது இந்துத்துவக் கருத்துப் பரப்புரையாளர் களின் முக்கியப் பணியாக உள்ளது. இவ்வாண்டு (2024) வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மோடி அரசின் சாதனைகளைப் புகழ்வதற்காக அரசாங்க உயர் அதிகாரிகளுக்கே பொறுப்புக் கொடுத்துள்ளனர்.

8. ஜெர்மன் நாஜிகள் பரப்பி வந்த பழங்காலப் பெருமைப் பரப்புரை: முதலாம் உலகப்போருக்கு (அதில் அது படுதோல்வியடைந்தது)முன்னர் ஜெர்மனிக்கு இருந்த 'புகழை' மீட்டெடுப்பதற்கு நாஜிகள் முனைந்தனர்.

இந்திய நாஜிகளோ புராணக் கட்டுக்கதைகளை வரலாறாகக் காட்டி, இண்டெர்நெட், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, விண்வெளிப் பயணம் முதலிய எல்லாமே பழங்கால இந்து இந்தியாவில் இருந்ததாகவும், எனவேதான் அந்தப் புகழை மீண்டும் பெறுவதற்காக இந்து நாகரிகத்தை சிதைத்த அந்நிய மதத்தினரை ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் பயன்படுத்தாத மேற்கு நாட்டுத் தொழில் நுட்பம் ஏதும் கிடையாது என்பது தான் உண்மை.

9. ஜெர்மன் நாஜிகளின் வணிகத் தடைகள்: யூதர்கள் வணிகம் செய்வதையோ, அவர்களின் கடைகளில் பொருள்களை வாங்கு வதையோ தடை செய்ததுடன், யூத மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்குரைஞர்கள் முதலியோரைப் புறக்கணிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.

இந்தியா நாஜிகளோ முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை, கடை கண்ணிகளைப் புறக் கணிக்குமாறும் தலித்துகள் மற்றும் சிறுபான்மை யினர் ஆகியோர்களைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியியிலாளர்கள் முதலியோரைப் புறக்கணிக்கும்படியும் பரப்புரை செய்கிறார்கள்.

10. ஜெர்மன் நாஜிகளின் தனிமனித ‘வீர வழிபாடு' : ஜெர்மன் நாஜிகள் ஹிட்லரை வழிபாட்டுக்குரிய மனிதராக மாற்றினார்கள். அவரை ‘அடையாளம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்த போர் வீரர்' என்றும், ஆனால் அனைத்து வல்லமை படைத்தவர் என்றும் போற்றிப் புகழ்ந்தனர். ஜெர்மனியின் இரட்சகர் அவர் ஒருவரே என்று பரப்புரை செய்தனர்

இந்திய நாஜிகளோ 'சாயா விற்றுக் கொண் டிருந்த' மிக சாமானிய மனிதரான மோடி 56 அங்குல மார்பளவு கொண்ட மாபெரும் வீரர் என்றும், தன்னந்தந்தனியாகவே இந்தியாவின் பிரச்சினைகள் அனைத்தையும் கையாண்டு தீர்வு காண்பதில் ஈடிணையற்றவர் என்றும் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால், அவர் எம்.ஏ பட்டம் வாங்கியதற்கான சான்றைக் கேட்டால், கேட்பவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்றனர்.

11. ஜெர்மன் நாஜிகள் இளம் உள்ளங்கள் மீது வைத்த குறி: ஜெர்மானிய இளைஞர்களி டையேயும் சிறார்களிடமும் ஆரிய மேன்மைக் கருத்துகளையும் யூத விரோதக் கருத்துகளையும் புகுத்தினர்.

இந்திய நாஜிகளோ இந்துத்துவ வெறிக் கருத்துகளைப் பரப்ப பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் கொண்ட பெரும் வலைப் பின்னலை உருவாக்கியுள்ளனர். குழந்தைகளுக்கென்றே தனிப் பிரிவை உருவாக்கி அந்தப் பிஞ்சு உள்ளங்களிலும் இந்துத்துவ நச்சுக் கருத்து களைப் புகுத்துகின்றனர். அது மட்டுமின்றி தேசியக் கல்வித் திட்டம்கள் என்ற பெயரால் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத
கல்விக்கூடங்களிலும், ஏன், உயர் கல்வி நிலையங்களிலும்கூட இந்துத் துவக் கருத்துகளைப் புகுத்தும் பாடத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.

12. ஜெர்மன் நாஜிகளின் மத விரோதம்: ஜெர்மன் நாஜிகள் யூதர்களின் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைத் தகர்த்தெறிந்தனர்.

இந்திய நாஜிகளோ மசூதிகளையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் தாக்கி அவற்றிலுள்ள பொருள்களை சூறையாடுவதுடன் அவற்றை இடித்துத் தள்ளவும் செய்கிறார்கள். பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது போதாதென்று பல நூற்றாண்டுக்கால வரலாறுருடையை வேறு மசூதிகள் மீதும் பார்வை யைப் பதித்து அவை ஒருகாலத்தில் இந்துக் கோவில்களாக இருந்தன என்று 'நிரூபிப்பதற்கு' முயல்கிறார்கள். இதற்கு இந்திய ஒன்றிய அரசாங் கத்தின் தொல்லியல் துறையின் ஆதரவும் நீதிமன்றங் களின் ஆதரவும் கிடைக்கிறது.

13. ஜெர்மன் நாஜிகளின் 'ஜனநாயகம்': 'ஜனநாயக' முறை மூலமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றதுடன் அவர்களது ஆட்சிக்கு முன்பிருந்த ஜெர்மன் குடியரசு வகுத்த அரசியல மைப்புச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றினர்; நிர்வாகத் துறை, நீதித் துறை முழுவதையும் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்திய பாசிசவாதிகளும் அவ்வாறேதான். தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் மூர்க்கத்தனமான பெரும்பான்மை பெற்றுள்ள அவர்கள், நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். கடந்த ஐந்தாண்டுக் காலமாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகள் இந்திய அரசியல மைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இந்துத் துவப் பாசிச அரசின் சட்டங்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கும் முழுமையான ஒப்புதல் வழங்கியுள்ளன.

14. ஜெர்மானிய நாஜிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமிருந்த உறவு: மிகப் பெரும் இரசாயன மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐ.ஜி.ஃபார்பென் (IG Farben) இது யூதர்களைக் கொல்வதற்கான நச்சு வாயுவைத் தயாரித்து நாஜிகளுக்குக் கொடுத்தது], பி.எம்.டபிள்யூ (BMW), (Mercedes-Benz), (Volkswagen), (Audi) ஆகிய பெரும் ஜெர்மன் மோட்டார் வாகனத் தொழிற் சாலைகள் மட்டுமல்லாது, அமெரிக்காவின் ஃபோர்ட் (Ford),(General Motors), ஆகியனவும் உயர்வகைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து சாதனங்களைத் தயாரிக்கும் ஜெர்மானிய கார்ப்பரேட் நிறுவனம் (Siemens), விளையாட்டு சாதனங்கள், காலணிகள் முதலியவற்றைத் தயாரிக்கும் அடிடாஸ் (Adidas) முதலிய பெரும் முதலாளிய நிறுவனங்களும் முக்கிய ஜெர்மன் வங்கி களும் அமெரிக்க வங்கிகளும் நாஜிகளுக்குப் பெரும் ஆதரவளித்தன. கைது செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான யூதர்களை தங்கள் தொழிற்சாலைகளில் ஊதியமின்றி உழைக்க வைத்தன.

15. ஜெர்மன் நாஜிச போர்க்குற்றவாளிகள்:

ஜெர்மன் நாஜி போர்க் குற்றவாளிகளைத் தண்டிப் பதற்காக நேச நாடுகள் (இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற ஏகாதிபத்திய நாடுகளும் சோசலிச சோவியத் யூனியனும்) இணைந்து உருவாக்கிய 'நியூ ரம்பரக் நீதிமன்றம்', சோவியத் யூனியனின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி நூற்றுக் கணக்கான நாஜி விஞ்ஞானிகளையும், தொழில்நுட்ப, இராணுவ வல்லுநர்களையும் அமெரிக்கா தன் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு வழிவகுத்தது.போர்க் குற்றவாளிகளாகவும் இனக்கொலைக்கு ஆதரவளித்தவையாகவும் இருந்த மேற்சொன்ன கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப் படவில்லை. அவை இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் முறியடிக்கப்பட்ட பிறகு இன்று வரை கொழுத்த இலாபத்துடன் இயங்கிக் கொண்டி ருக்கின்றன.

அதேபோலத்தான் இந்தியாவில் அதானி, அம்பானி, டாட்டா குழுமங்கள் (இவை முதலீடு செய்யாத தொழில், வணிகத் துறைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், போக்குவரத்து சாதனத் தொழிற்சாலைகள், இராணுவத்திற்கான ஆயுத உற்பத்தி மற்றும் துணையுபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏதும் இல்லையென்றாகிவிட்டது), நாட்டுடைமயாக்கப்பட்டுள்ள வங்கிகள் ஆகியன இந்துத்துவ பாசிச அரசுக்குப் பல வகைகளில் உதவி செய்து வருகின்றன.

16. நாஜிகளின் பொதுக் கூட்டங்களும் பேரணிகளும்: நாஜிகள் நடத்திய பொதுக் கூட்டங்கள் பெரும் திரைப்படக் காட்சிகள் போல அமைந்திருந்தன. அதில் பங்கேற்று சொற்பொழி வாற்றியவர்கள் நடிகர்களைப் போலவே கைகளை அசைத்தும், குரலை உயர்த்தியும் முன்பக்கமும் பின் பக்கமும் இடப்புறமும் வலப்புறமும் தலைகளைத் திருப்பியும் அந்தந்த இடங்களுக்கேற்ற உடையலங் காரங்களுடன் சினிமா பாணியில் பேசியதைப் போலவேதான் மோடி, அமித்ஷா போன்ற இந்துத்துவ பாசிசத் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசு வதையும் 'ரோட் ஷோ' என்ற பெயரில் ஆர்ப்பாட்ட மும் அலங்காரமும் மிக்க ஊர்வலங்களில் செல்வதை யும் நாஜிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஊடகங் களைப் போலவே இந்துத்துவ பாசிசத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் மேற்சொன்ன வற்றை மிக உற்சாகத்துடன் ஒலிபரப்புவதைப் பார்க்கிறோம்.

மேற்சொன்னவற்றைத் தொகுத்துக் கூறுவ தென்றால், ஜெர்மனியில் பெரும் தொழில், நிதி நிறுவனங்களும் நாஜிகளின் இனமேன்மை, இன வெறுப்புக் கருத்துநிலைகளும் இணைந்து செயல் பட்டது போலவே இந்தியாவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பார்ப்பனிய இந்துத்துவக் கருது நிலையும் ஒன்றுகூடி மக்களை மயக்கியும் மடக்கியும் ஒடுக்கியும் வருகின்றன.

ஜெர்மானிய நாஜிகளுக்கும் ஹிட்லருக்கும் நேர்ந்த முடிவு என்ன என்பதை உலகமே அறியும்.இந்திய பாசிஸ்டுகளுக்கும் அதே கதிதானோ?