இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (லிபரேஷன்)

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

அகில இந்திய பார்வர்டு பிளாக்

 டிசம்பர் 23 2024

 பத்திரிகை செய்தி!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (லிபரேஷன்),

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி,

அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டிசம்பர் 22, 2024 அன்று டெல்லியில் கூடிப் பேசினர். கூட்டத்திற்குப் பிறகு கீழ்க்கண்ட அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர்.

 அமித்ஷா பதவி விலக வேண்டும்!

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து குறிப்பிட்ட அவமதிப்புமிக்க கண்ணியக் குறைவான பேச்சை அடுத்து நாடு முழுவதும் பரந்த அளவில் கோபமும் அதற்கு எதிர்ப்பும் நடந்து வருவதை கூட்டம் கவனத்தில் கொண்டது.

ஆயினும், அமித் ஷாவோ அல்லது பிரதம மந்திரி மோடியோ அதற்கான பொறுப்பேற்று சரி செய்யும் நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை.

   ஆகவே, இடதுசாரிக் கட்சிகள் நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்வது என்றும்,  டிசம்பர் 30 அன்று கூட்டாக எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டமைப்பது என்றும் முடிவு செய்தன. உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பது நாடுதழுவிய எதிர்ப்பு நாள் கோரிக்கையாக இருக்கும்.

 ஒரே சமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான கூட்டாட்சி மீதான தாக்குதல்.

 அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா உட்பட இரண்டு திருத்த மசோதாக்கள் மூலம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ என்ற முன்மொழிவை இடதுசாரிக் கட்சிகள் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் எதிர்க்கிறோம். அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கான இந்த முன்மொழிவுகள் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதும், மாநில சட்டமன்றங்களின் அவற்றைத் தேர்ந்தெடுத்த மக்களின் உரிமைகளின் மீதும் நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும். இது மத்தியத்துவப்படுத்தலுக்கான ஏற்பாடு மட்டுமின்றி, சட்டமன்றத்தின் ஐந்தாண்டு காலத்தை தன்னிச்சையாகக் குறைப்பதன் மூலம் மக்களின் விருப்பத் தேர்வை முடமாக்குவதுமாகும்.

 ‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக இடதுசாரிக்  கட்சிகள் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திடும்.

 சிசிடிவி கேமரா, காணொலிப் பதிவுகள் போன்ற மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்யும் உரிமையை பறிக்கும் வகையில், தேர்தல் நடத்தை விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள  திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன.

 இடதுசாரிகளின் ஒன்றுபட்ட தலையீடு குறித்து.

 வரும் காலங்களில் அரசியல் பிரச்சினைகள், மக்கள் பிரச்சனைகளில் இடதுசாரிகளின் தலையீட்டை அதிகப்படுத்துவது என கூட்டம் முடிவு செய்தது. இதற்காக, இடதுசாரிக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தவும், கூட்டு இயக்கங்களை வளர்க்கவும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டங்கள் முறையாக நடத்தப்படும்.

 து.ராஜா

பொதுச் செயலாளர், சி பி ஐ

 

பிரகாஷ்காரத்

அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர், சி பி ஐ (எம்)

 

திபங்கர் பட்டாச்சாரியா

பொதுச் செயலாளர் சி பி ஐ (எம் எல்) (லிபரேஷன்)

 

மனோஜ் பட்டாச்சாரியா

பொதுச் செயலாளர் ஆர் எஸ் பி

 

ஜி தேவராஜன்

பொதுச் செயலாளர் ஏ ஐ எப் பி