நாட்டில், ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மேலும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.அரசமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நாட்டின் முதல் முன்னுரிமையான போராட்ட மாகும். அடித்தள மக்கள் தொடங்கி அனைத்துப் பகுதி மக்களின் முதன்மைப் போராட்டமாகும். தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் ஊக்கம் பெற்று வருகிறது. நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு சற்றும் குறையாத இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் முன்களப் பணியாளர்களாக களமாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் புரட்சிகர இடதுசாரி தோழர்கள் அப்பு, சந்திரகுமார், சந்திரசேகர், சுப்பு, மச்சக்காளை, பாலன் உள்ளிட்ட தோழர்கள், இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் போராட் டத்தில் முன்வரிசையில் இருந்தவர்கள். அதனால் களப்பலியானவர்கள். சுதந்திர இந்தியாவில், உழைக்கும் மக்களது விருப்பங்களும் கனவு களும் நிறைவேற்றப்படாத நிலையில், இந்தியாவை ஜனநாயகப்படுத்தும் போராட் டங்கள் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தப் பட்டபோது, வெடித்துக் கிளம்பியது நக்சல்பாரி. இந்திய சமூகத்தை புரட்சிகரமான முறையில் ஜனநாயகப்படுத்தும் போராட்டத்தில் இகக (மாலெ) களமிறங்கியது. இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்களை அணிதிரட்டிய போராட்டங் களில் ஆதிக்க சக்திகள், ஆட்சியாளர்களின் ஆறாக் கோபத்தை தேடிக்கொண்டார்கள் புரட்சிகர கம்யூனிஸ்ட்கள். உழைக்கும் மக்களது ஜனநாயகத்துக்காகப் போராடிய கம்யூனிஸ்ட்கள் சதித்தனமான முறையில் கொல்லப்பட்டார்கள். இகக(மாலெ)வின் முதல் மாநிலச் செயலாளர் அப்பு ரகசியமாக கொல்லப்பட்டார். ஆட்சி யாளர்களும் காவலதிகாரிகளும் அவரது சடலத்தைக்கூட காணாமலடித்து விட்டனர்.

இந்த தியாகிகளது நினைவாக, தோழர்கள் சந்திரசேகர் - சந்திரகுமார் கொல்லப்பட்ட செப்டம்பர் 2 முதல் தோழர் சுப்பு கொல்லப்பட்ட செப்டம்பர் 13 வரை, மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது. இந்த பரப்புரை இயக்கத்தில், "மோடி ஆட்சியை வெளியேற்று வோம், ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்" எனும் முழக்கம், தமிழ்நாட்டின் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் சக்திவாய்ந்த வகையில் எதிரொலித்தது. இதக (மாலெ), அவிகிதொச நடத்திய இந்த பரப்புரை இயக்கம், தேசத்தின் ஜனநாயகத்தை காக்க, இந்தியாவைக் காக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

தோழர்கள் சந்திரகுமாரும் சந்திரசேகரும் தஞ்சையின் தலித், உழைக்கும் மக்களின் நிலம், கூலி, கவுரவம், ஜனநாயகத்துக்கான போராட் டத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள். தோழர் சந்திரகுமார், பள்ளி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே, சொற்பக் கூலிக்கு வேலை செய்த விவசாய கூலித் தொழிலாளரை அணிதிரட்டி போராடச் செய்து, திருப்பனந்தாள் ஒன்றியத் திலுள்ள பல கிராமங்களில் உள்ள தொழிலா ளர்கள் அதிக கூலி பெறச் செய்தார். மாணவர் களுக்கு சுயமரியாதை உணர்வூட்டி தலை நிமிரச் செய்தார். நிலவுடமை ஆதிக்கச் சக்திகளின் அதிகாரத்தை தகர்க்கும் போராட்டத்தில் முன்னணிப் போராளிகளாக இருந்தனர் சந்திர குமாரும் சந்திரசேகரும்.

தோழர் சுப்பு, ஆதிக்க இடைநிலைச் சாதி நிலவுடைமை சக்திகளின் அதிகாரத்தைக் கண்டு பொங்கி எழுந்தவர். இந்தப் பகுதிகளில், கோவில்கள் ஆதிக்க அதிகாரக் குறியீடுகளாக இருந்தன. உரிமைகள் மறுக்கப்பட்டன; நியாயமான விருப்பங்கள் நசுக்கப்பட்டன. உஞ்சனையில் புரவி எடுக்கும் உரிமைக்கு குரல் கொடுத்த ஐவர் கொல்லப்பட்டனர். இந்த பின்புலத்தில் இவற்றை எதிர்த்து கலகம் புரிந்தவர் தோழர் சுப்பு. மாலெ கட்சியின் வழிகாட்டு தலின்படி, தலித் உழைக்கும் மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். இவ்வாறு சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற சமூகத்தில் ஜனநாயகப்படுத்தும் போராட்டத்தை முன்னெடுத் தவர்கள் புரட்சிகர கம்யூனிஸ்ட்கள். செப்டம்பர் 30ல் உயிர்நீத்த தோழர் சீனிவாசராவ், பண்ணையடிமைகளை, ஏழை விவசாயிகளை வெற்றிகரமாக அணிதிரட்டியவர். இதன் தொடர்ச்சியாக, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இகக(மாலெ) மாநிலச் செயலாளர் அப்பு, மற்றொரு மாநிலச் செயலாளர் மச்சக்காளை இதேபோல் வடார்க்காடு, தருமபுரி மாவட்டங் களில் புரட்சிகர போராட்டத்தை நடத்திய தோழர் பாலன் உள்ளிட்டவர்களின் தொடர்ச்சியாகத்தான் தோழர்கள் சந்திரசேகர், சந்திரகுமார், சுப்பு களமாடினர். உழைக்கும் மக்களது ஜனநாயகத் துக்காக கிராமப்புற வேர்க்கால் தளங்களில் போராடினர்.

1984 செப்டம்பர் 2 அன்று சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற அந்த பொதுக்கூட்டத்தை திமுக,தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகள் நடத்தின. ஆந்திரா மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட என்டிஆர் தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை ஒன்றிய காங்கிரஸ் ஆட்சி கலைத்ததை எதிர்த்து அந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆட்சிக் கலைப்பை இகக(மாலெ) 'ஜனநாயகப் படுகொலை'யென கண்டித்தது. அதே நாளில், கிராமங்களில் உழைக்கும் மக்களின் ஜனநாயக விருப்பங்களை இயக்கமாக்கிய தலைவர்கள் சந்திரசேகர், சந்திரகுமார் மணலூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கட்சியின் வேறு பல தலைவர்களுக்கும் கொடும்காயங்கள். அந்த நாளில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. 

1994ல், “ஊழல், சர்வாதிகார ஜெ. ஆட்சியை வெளியேற்றுவோம்" என்று முழங்கிய மக்கள் பேரணியை சென்னையில் இகக (மாலெ) நடத்தியது. தோழர் வினோத் மிஸ்ரா கலந்து கொண்ட அந்த மக்கள் திரள் பேரணியில், சிவகங்கை மாவட்டத்தின் பெருந்திரள் மக்களுக்கு தலைமையேற்று தோழர் சுப்பு கலந்து கொண்டார். அந்த ஆண்டு செப்டம்பர் 13ம் நாளில்தான், ஆதிக்க சக்திகளையும் ஆட்சியாளர்களையும் ஒருசேர கோபமடையச் செய்த தோழர் சுப்பு கொல்லப்பட்டார். வெவ்வேறு கட்சிகளில் இருந்த சாதி ஆதிக்க, புதுப் பணக்கார சக்திகள், ஜெ ஆட்சியில்தான் அதிதீவிர உக்கிரமடைந்து தலைவிரித்தாடின. அந்த சக்திகளின் நரித்தனமான பிரிவொன்றுதான் சுப்பு படுகொலையை நடத்தியது. ஜெ ஆட்சியில்தான் சாதி ஆதிக்க ஒடுக்குமுறை சக்திகள் அதி தீவிர உச்சம் பெற்றன. கொடியங் குளம் தொடங்கி பரமக்குடி வரை தலித்துகள் மீதான கொடூரமான ஒடுக்குமுறைகள் பேயாட்டம் ஆடின. எனவேதான் அதிமுக வெற்றி பெற்ற போது, "பார்ப்பனியத்தின் மறுவருகை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அறிவித்தது.

இன்று, சாதி ஆதிக்க சக்திகள், வருணாசிரம சனாதன ஆணாதிக்க பார்ப்பனிய சக்திகள் (அனைத்து விதமான பிற்போக்கு சக்திகள்) முதல் கார்ப்பரேட் சக்திகள் வரை அவற்றின் உருண்டு திரண்ட தலைமை சக்தியான ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜக ஆட்சி இருக்கிறது. இது அனைத்து விதமான தேசிய, கம்யூனிச, திராவிட, பெரியாரிய, அம்பேத்கரிய முற்போக்கு இயக்கங் களுக்கும் சக்திகளுக்கும் எதிரானது மட்டுமின்றி, பாசிச சர்வாதிகாரமாக ஓங்கி வளர்ந்திருக்கிறது. இதை வீழ்த்துவது மேற்கண்ட அனைத்து முற்போக்கு சக்திகளின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

செப்டம்பர் மாதம், புரட்சிகர இடது இயக்கத்துக்கு மட்டுமின்றி நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்துக்கும் மிக முக்கியமானதொரு மாதம். செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள், 16 திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள், 17 பெரியார் பிறந்தநாள். திராவிட இயக்கம் என்பது நீதிக் கட்சி துவக்கம் முதல், தற்போதுள்ள பெரியாரிய குழுக்கள், அமைப்புகள், ஆளுமைகள், திமுக உள்ளிட்ட பல பிரிவுகளைக் கொண்டது. மூன்று பிரிவாக துண்டுபட்டுள்ள அதிமுக குழுக்கள், ஓரிரு திராவிட (இட ஒதுக்கீடு, இருமொழிக் கொள்கை ) அடையாளங்களைக் கொண்டிருப் பினும் இவை திராவிட இயக்க அடையாள வரையறையிலிருந்து தள்ளி வைத்தே அறியப்படு கிறது. அஇஅதிமுக பாஜகவுடன் கூட்டணி கொண்டுள்ள நிலையில் அதன் திராவிட இயக்க அடையாளம் மேலும் சரிந்து சிதைந்து போயுள்ளது. கருத்தியல், அரசியல் ரீதியாக திமுகவை முதன்மை சக்தியாகக் கொண்ட பல பிரிவுகளை, அவற்றின் பின் இயங்கும் ஆளுமைகளை, குழுக்களையே திராவிட இயக்கம் எனக் கூறலாம். திமுகவின் "திராவிட மாடல் ஆட்சி" என்ற சித்தரிப்பும் இதை விளக்குவதாகவே உள்ளது.

பாஜக, இந்திய அரசியலில் ஆளுமை பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பின்னணியில் தமிழ்நாட்டிலும் காலூன்றுவதற்காக அசுர முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், திராவிட அரசியல் வலதுசாரி சக்திகளிடமிருந்து வலுவான சவால்களை எதிர்கொள்கிறது. எனவே, தன்னை மறுவரையறை செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு ஒன்றிய அதிகாரத் திலும் பங்கு பெற்ற கருணாநிதி தலைமையி லிருந்த திமுகவின் வளர்ந்துவரும் உதயநிதி ஸ்டாலின் ஒரே நாளில் சனாதன எதிர்ப்புக் குரலாக, திருஉருவாக எழுந்துள்ளதை சுட்டிக் காட்டலாம். இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு 'இந்தியா' கூட்டணியில் விரிசலைக் கொண்டு வர பாரதப் பிரதமரே முயற்சித்தாலும் இதில் ஊன்றி நிற்பதை வரவேற்கத்தக்க நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளலாம். உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத, அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டு மென்று பாஜக போராட்டம் நடத்தியுள்ள பின்னணியில், 1000 கோயில்களுக்கு குடமுழக்கு நடத்தியதை, 'இறைநம்பிக்கையாளரும் போற்றும் திமுக அரசு” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பூரிப்புடன் பேசியுள்ளதையும் கவனத்தில் கொள்ளலாம். கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற அணுகுமுறையின் தொடர்ச்சியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

செப்டம்பர் 11ல் தியாகியான இமானுவேல் சேகரனுக்கு அவரது நினைவிடத்தில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. என்றாலும் வேங்கைவயல் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வியை எழுப்பாமல் இருக்கமுடியாது. அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவு படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதுதான். அதேவேளை தலித் சமையலர்களை முன்னிறுத்தி உணவைப் புறக்கணிக்கிற, கடும் கண்டனத்துக் குரிய செயல்களைப் பற்றி முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது பற்றி சுட்டிக் காட்டாமல் இருக்கமுடியாது. வரவேற்கத்தக்க பல சமூகக் கொள்கைகளும் சமூகங்களுக்கு எதிரான பொருளாதார கொள்கைகளும் சேர்ந்து செல்லமுடியாது என்பதை சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியாது.

காங்கிரஸ் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தால் ஆட்சியை இழந்ததுதான் திமுக. அவசரநிலை கால சித்தரவதைகளை அனுபவித்த வர்கள் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள். எம்ஜிஆரை எதிர்கொள்ளும் அவசரத்தில் ஏற்கனவே காங்கிரசுடன் கைகோர்க்கும் அரசியல் முடிவை திமுக எடுத்திருந்தாலும் இன்று இந்தியாவில், அறிவிக்கப்படாத நிரந்தர அவசரநிலையைக் கொண்டுவந்துள்ள பாஜகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தி, "நாட்டைக் காக்கும் ஜனநாயகத்தைக் காக்கும்' போராட் டத்தில் காங்கிரசோடு கரம் சேர்க்கும் முடிவுக்கு புதிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

"நாடு இருந்தால் தான் வீடு கேட்க முடியும்; வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். ஜனநாயக விழுமியங்கள் கொண்ட அண்ணா, இந்தியா பாகிஸ்தான் போரின் போது கூறியிருந்த மேற்கூறிய பிரபலமான கருத்து, இன்று நாட்டில் நிலவும் முற்றிலும் வேறுபட்ட அரசியல் சூழலில் தமிழ்நாட்டின் கூட்டுணர்வில் வெளிப் படுவதாகவே கருதலாம். மதச் சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு இவற்றை ஒழித்துக்கட்ட முனையும் பாஜகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அரசியல் பின்னணியில், மேற்கூறிய அரசியல் கொள்கைகளில் தீவிர அக்கறை கொண்டுள்ள கட்சிகளுடன் கரம் கோர்ப்பது அவசியம். பாசிச பாஜகவையும் அதன் அரசியல் சதித்திட்டங் களைத் தோற்கடிப்பதும் இந்தியாவின் ஜனநாயகப் போரில் ஒரு முக்கியமான கட்டம். இந்த கட்டத்தில், புரட்சிகர ஜனநாயக சக்திகள், திமுக உள்ளிட்ட விரிவான பாஜக எதிர்ப்பு அரசியல் சக்திகளுடன் சேர்ந்து போராடுவது மிகவும் முக்கியம். உழைக்கும் மக்களது ஜனநாயகத்துக்கும் இந்தியாவின் முற்றூடான ஜனநாயகப்படுத்தலுக்கும் போராடும் புரட்சிகர இடதுகளுக்கு இந்த இலக்கு நோக்கி முன்னேற ஜனநாயகம் காக்கப்படுவது, இந்தியா பாதுகாக்கப்படுவது, அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்த லட்சிய நோக்கினடிப்படையில்,இடதுசாரிகளுக்கும், புரட்சிகர இடதுசாரி களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் முக்கியமான செப்டம்பர் மாதம் விடுக்கும் அழைப்பு, பாஜக எதிர்ப்புக்கான பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையை வலுப்படுத்த உறுதி ஏற்பதுதான்