பொது மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் 11ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 நவம்பர் 25,26,27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. முதல் நாள் நவம்பர் 25 அன்று பொது மாநாடு திருச்சி மாநகர் அரிஸ்டோ மண்பத்தில் தோழர் மகேந்திரன் அரங்கத்தில், "ஒற்றை ஆட்சிக்கு எதிராக, கூட்டாட்சி முறைக்காக, இந்தி திணிப்புக்கு எதிராக, மொழி சமத்துவத்திற்காக, மக்கள் போராட்ட மாற்றணிக்காக" என்ற தலைப்பில் நடைபெற்றது. தோழர் மகேந்திரனுக்கும் மக்கள் போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தி மாநாடு ஆரம்பமானது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பொது மாநாட்டு அமர்வுக்கு இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார். இகக(மாலெ) திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஞானதேசிகன் வரவேற்றுப் பேசினார். மாநாட்டின் பொது அமர்வில், இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர்,இகக(மா) மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இகக மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்.பி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு.அப்துல் சமது எம்எல்ஏ, இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராஜூ ஆகியோர் உரையாற்றினர். இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் பழ.ஆசைத்தம்பி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன் தீர்மானங்களை முன்வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ.சிம்சன் நன்றி கூறினார்.