தோழர் விஎம் கனவு கண்ட இந்தியாவில் அதிகாரம், உண்மை யிலேயே மக்களுக்குரியதாக இருக்கும். குடிமக்கள் ஒவ்வொருவரும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். அவர் கனவு கண்ட இந்தியாவில், வேற்றுமைதான் ஒற்றுமைக்கு அடித்தளமென கொண்டாடப்படும். கருத்து வேறுபாடுகள், வெறுப்பைக் கிளறிவிடவும் மக்களை பிளவுபடுத்தவும் பயன்படுத்தப்படாது. இங்கு மாற்றுக் கருத்து, உரையாடலிலிருந்து, ஜனநாயகம் வலுப்பெறும். மதமும் அரசியலும் ஒருபோதும் கலவாத இந்தியாவையும் அவர் கனவு கண்டார். இங்கு அரசியல், சமூகமாற்றத்துக்கான கருவியாக இருக்குமே ஒழிய, ஏற்றத் தாழ்வு, ஒடுக்குமுறை, சுரண்டல் அடிப்படையிலான சமூக ஒழுங்கைக் கட்டிக் காப்பதாக இருக்காது.

எல்லா இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு உண்மையான ஜனநாயகம், சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, துணிச்சலும் வலுவும் முதிர்ச்சியும் கொண்ட பெரிய, வலுவான, துடிப்புமிக்க கட்சியாக இக்க (மாலெ) வளர வேண்டுமென விரும்பினார். நாடாளுமன்ற அரங்கு உள்ளிட்ட ஒவ்வொரு அரங்கிலும் இகக(மாலெ), மக்களது குரலை வலுப்படுத்திட வேண்டுமென அவர் விரும்பினார்.

ஆனால், வரலாற்றில் பெரிய யுத்தங்கள் எப்போதும் தெருக்களில் மக்கள் அறுதியிடலால் மட்டுமே தீர்வுகாணப்பட்டிருக்கின்றன என்பதையும் நமக்கு நினைவுப்படுத்தியிருந்தார்.

இந்தியாவிலும் சர்வதேச அரங்கிலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகள், பின்னடைவுகளில் இருந்து கற்றுக் கொண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் சவாலை கட்சி கையிலெடுத்துக் கொள்ள அவர் கட்சியை உத்வேகப்படுத்தினார். மேலும், இந்தியாவை ஒரு மதவாத பாசிச அரசாக மாற்றிடவிரும்பும் சங்கிப் படைகளின் திட்டத்துக்கு தீர்மானகரமான அடி கொடுக்க அனைத்துவிதமான போராடும் சக்திகளுடனும் கட்சி ஒன்றுபடவேண்டுமென்றும் உத்வேகப் படுத்தினார்.

தோழர் விஎம் இறப்பின் 24 ஆவது ஆண்டில், இகக(மாலெ)வை ஒவ்வொரு அம்சங்களிலும் வலுப்படுத்த உறுதி ஏற்கிறோம். மேலும், பிப்ரவரி 16-20 வரை பாட்னாவில் (தோழர் வினோத் மிஸ்ரா நகர்) நடைபெற உள்ள 11 ஆவது காங்கிரசையும் பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள 'ஜனநாயகத்தை காப்போம்; இந்தியாவைக் காப்போம்' பேரணியையும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறச் செய்திட வேண்டும்.

தோழர் விஎம்க்கு சிவப்பு வணக்கம்! 

இகக(மாலெ) நீடூழி வாழ்க!

பாசிசம் வீழ்க, 

ஜனநாயகம் வெல்க!

மத்தியக் கமிட்டி, இகக(மாலெ)