2017 டிசம்பரில் ஏஐசிசிடியுவின் ஒன்பதாவது மாநில மாநாடு சென்னை பாடியநல்லூரில் நடைபெற்றது. அதற்குப் பிறகு சவாலான சூழலில் வண்டலூரில் கூடிய பொதுக்குழு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தது. 2020 மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 10வது அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தின் உரிய பங்களிப்பை புதிய நிர்வாகக் குழு திறம்படச் செய்தது. இந்த இயக்கப் போக்கில் அமைப்பின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் நிலை நிறுத்திக் கொண்டது. 

அகில இந்திய மாநாடு முடிந்து வந்தவுடன் நாடே கொரோனா பெருந்தொற்றில் முடங்கிப் போனது. அந்த சூழ்நிலையிலும் ஏஐசிசிடியு தமிழகத்தில் நிராதரவான தொழிலாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆதரவு கரம் நீட்டி, எல்லா வகையிலும் தொழிலாளர் துயர் துடைக்க முன்னணி பாத்திரம் ஆற்றியது. உணவு ஏற்பாடு முதல் புலம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வரை உதவியது. அரசாங்க நிறுவனங்களையும் திறம்பட பயன்படுத்திக் கொண்டது. பெருந் தொற்று காலம் முடிந்து அமைப்பை உறுதிப் படுத்திக் கொண்டு போராட்ட இயக்கங்களை இன்றளவும் அயராது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தொழிலாளர், விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு, காவிப் பாசிச மோடி ஆட்சி !

2014இல் வெற்றி பெற்ற மோடி மீண்டும் 2019 அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்தார். 2014 இல் போதுமான ஆதரவு இல்லாமல் கிடப்பில் போட்ட மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, அம்பானி, அதானி, கார்ப்பரேட் ஆதரவு பாசிசத் திட்டங்களை நல்வாய்ப்பாக பயன்படுத்தி முழு வீச்சில் அமல்படுத்தத் துவங்கினார். தன்னுடைய காவிப் பாசிச நிகழ்ச்சி நிரலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார். 'இந்து ராஷ்ட்ரா' எனும் முழக்கம் நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. கார்ப்பரேட் நலனிலிருந்து, இந்து ராஷ்டிர கனவிலிருந்து வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்படும் திட்டங்கள் எல்லாமே விவசாயிகள், தொழிலாளர்கள் நலனிலிருந்து, மக்கள் நலனிலிருந்து கொண்டு வரப்படுவதாகவே ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். விஸ்வகுருவின் ஆட்சியில் அமிர்தகாலம் நடைபெறுவதாக புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கு மேலாக போராடி 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்து வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் கார்ப்பரேட் ஆதரவு விவசாயிகள் விரோத சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற வைத்தார்கள்.

தொழிலாளர்களை அடிமைகளாக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்! 

2014இல் ஆட்சிக்கு வந்த உடனேயே தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும் என மோடி அறிவித்தார். ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. 2019ல் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் 2019 ஆகஸ்டிலேயே ஊதியம் பற்றிய சட்டத் தொகுப்பு நிறைவேற்றப்பட்டது. நாடே பெரும் தொற்றுப் பாதிப்பில் இருந்தபோது 2020 செப்டம்பரில் 1)தொழில் உறவு 2) சமூக பாதுகாப்பு 3)பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தொழில் நிலைமைகள் ஆகிய மூன்று சட்டத் தொகுப்புகளும் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மத்திய விதிகளும் உருவாக்கப்பட்டு சட்டம் அமலாக்கத்திற்கு தயார் நிலையில் உள்ளது. மாநில விதிகளை உருவாக்கும்படி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏஐசிசிடியு உட்பட 10 மையச் சங்கங்கள் இணைந்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைக் கட்டமைத்து வருகின்றன. இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு சட்டத் தொகுப்புகளின் அமலாக்கத்தைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். எப்படி இருந்தபோதிலும் தொழிலாளர்களின் தலை மீது கொடு வாளாக சட்டத் தொகுப்புகள் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டின் திமுக ஆட்சி.

மத்தியில் ஆளும் பாஜகவின் அடிமை அரசாக இருந்த பழனிச்சாமி அரசாங்கம் அகற்றப்பட்டு திமுக ஆட்சி அமைத்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் குறிப்பாக தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை கள் தீர்க்கப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர்கள் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை எதிர்த்து நடந்து வரும் இயக்கங்களில் தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் முக்கிய பங்காற்றியது. விவசாயச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடாமல் பார்த்துக் கொள்கிற அதே நேரம், துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

டெல்லியில் இருந்து மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு வரை எல்லா எதிர்க்கட்சி அரசாங்கங்களுமே மூலதனத்தை ஈர்ப்பதில், அதற்கு சலுகை வழங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றனர். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக திமுக உட்பட எந்தவொரு எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

அடையாள நடவடிக்கைகள் போதுமானதல்ல.

தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் ஏஐடியுசி அலுவலகம் சென்று தொழிலாளர் கோரிக்கைகளை கேட்டுப் பெற்றதாகட்டும், வியாபார நிறுவனங்களில் சிப்பந்திகள் உட்கார இருக்கைகள் வழங்க வேண்டும் என்ற அரசாணை, அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்கள் உட்கார்ந்து சாப்பிட இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், நலவாரிய பயன்களில் சிறிதளவு உயர்வு, ஒன்றிய அரசுக்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டுச் சென்ற தொழிற்சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்தித்தது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தேர்தல் வாக்குறுதியில் 100% நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அதனால்தான் சென்னை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்களின் போராட்டக் களமாகிக் கொண்டிருக்கிறது.

காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய பென்ஷன் திட்டம் வேண்டும், 

பயிற்சியாளர் முறை, அவுட்சோர்சிங், குறித்தகால வேலை, காண்ட்ராக்ட்மயம் வேண்டாம்! 

மாநில அரசுத் துறைகளில், மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் வேலைவாய்ப்பு என்பது வெறும் கண் துடைப்பே. கௌரவமான வேலை நிலைமைகள், பணி நிலைமைகள், சமூகப் பாதுகாப்பு, ஓய்வு காலப் பயன்களுடன் வேலை வேண்டும். பெற்று வரும் சம்பளத்தில் 50% ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்யும் பழைய பென்ஷன் திட்டம் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோல் பத்தாண்டு காலம் அரசுத்துறையில் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வேண்டும். காண்ட்ராக்ட்மயம் அவுட்சோர்சிங் என்று சொல்லி இருக்கின்ற வேலையையும் பறிக்கின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்க காண்ட்ராக்ட் மயத்தைக் கட்டுப்படுத்த, ஒரு தொழிற் சாலையில் நிரந்தர தொழிலாளர் எண்ணிக் கையில் குறிப்பிட்ட சதவீதம்தான் பயிற்சியாளர்/ காண்ட்ராக்ட் தொழிலாளர் இருக்க முடியும் என்பதை உறுதி செய்ய தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள பயிற்சியாளர் சட்டத் திருத்தத்தை அமலாக்க வேண்டும். அதற்கு நிலையாணைச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.

திரும்பப் பெறப்பட்ட 12 மணி நேர வேலை அரசாணை!

தமிழகத் தொழிலாளர் வர்க்கம் ஒற்றை மனிதனாக எழுந்து நின்றதால் 12 மணி நேர வேலை அரசாணை திரும்பப் பெறப்பட்டது. ஆளும் கட்சியின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இந்த விஷயத்தில் உறுதியாக நின்றது வரவேற்பைப் பெற்றது. தமிழகத் தொழிலாளர் அமைச்சரை அனைத்து சங்கப் பிரதிநிதிகள் சந்தித்தபோது ஏஐசிசிடியு மட்டுமே 12 மணி நேர அரசாணை திரும்ப பெறப் படாவிட்டால் சட்டமன்றம் முற்றுகை உட்பட போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எழுத்துபூர்வ கடிதம் கொடுத்தது. ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கத்திற்கு அது உத்வேகம் அளித்தது. அரசாணை திரும்பப் பெறுவதற்கான தைரியம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்த தாக பெருமையும் பேசப்பட்டது. இந்த நிகழ் வானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தொழி லாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்தினால் என்ன நடக்கும் என்பதற்கும் எச்சரிக்கையாக இருந்தது.

பாக்ஸ்கான் பெண் தொழிலாளர் போராட்டம்! 

ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நகரமாக விளங்கும் சென்னையில் லாபத்தை கொட்டிக்குவித்துக் கொடுக்கும் தொழிலாளர் களின் வாழ்நிலையை படம்பிடித்துக் காட்டியது பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் இரவு பகலாக நடத்திய போராட்டம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தபிறகு போராட்ட முன்னணிகளை நிர்வாகம் பலி வாங்கியது. ஆட்டோமொபைல் துறையில் போராட்டக் கனல் இருந்து கொண்டே இருக்கிறது. 

பாதுகாப்பற்ற சேவைத் துறை வேலைகள்!

தகவல் தொழில்நுட்பம்(IT) தகவல் தொழில் நுட்பத்தால் இயங்கும் சேவைத் (ITES) துறையில் உள்ள பணிநிலைமைகள் பெரும் பாலும் பாதுகாப்பற்றதாய் உள்ளது. எவ்வித பணிப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் இல்லாதச் சூழலில் உலகச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் கொத்துக் கொத்தாகத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம் இருந்து கொண்டே இருக்கிறது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் தொழில்நுட்ப வசதி இருந்த காரணத்தால் கொரோனா காலப் பாதிப்பிலிருந்து இப்பிரிவுத் தொழிலாளர்கள் தப்பிப் பிழைத்தனர்.

தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும்!

மாநிலத்தில் மிகப்பெரிய வேலை அளிப்ப வராக இருக்கும் மின்சாரத் துறை, போக்கு வரத்துத் துறை தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது திமுக அரசுக்கு நேர்மறை அணுகுமுறை தேவை. மின்வாரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5000 கேங்க் மேன் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். வேலை கேட்டு போராடிய கேங்மேன் தொழிற்சங்க முன்னணிகள் மீதான குற்றவியல் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். இ டெண்டர் முறையை ரத்து செய்து ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர் களை இனம் கண்டு அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

போக்குவரத்துத் துறையில் எந்த விதத்திலும் 12 மணி நேர வேலையை அனுமதிக்க கூடாது காண்ட்ராக்ட் விடுவதற்கான டெண்டரை ரத்து செய்து நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நிரப்பப்பட வேண்டும்.

உள்ளாட்சித் துறையில் குறைந்தபட்ச ஊதியம் அல்லது மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் சமூகப் பாதுகாப்பு திட்டத்துடன் முறையாக அமலாக்கப்பட வேண்டும். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற அடிப்படையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அதுபோல் நிரந்தரத் தொழிலாளிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளிக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். மலக்குழி மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தூய்மைப் பணியாளர்கள் மீதான சாதிய ரீதியான அணுகுமுறையை அனுமதிக்கவே கூடாது.

பெரும்பான்மைத் தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வகை செய்யும் தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றப்பட வேண்டும்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொள் முதல், சேமிப்பு, விநியோகம் ஆகிய நடவடிக் கைகளை தனியார்மயமாக்கக்கூடாது. அங்கு பணி செய்யும் சுமைப் பணித் தொழிலாளர் களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பவர் எவராலும் குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 26,000, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 13,000 உத்தரவாதம் செய்திட வேண்டும். குறைந்தபட்சம் 20 சதவீத வருடாந்தர போனஸ் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் நடைமுறையில் உள்ள செஸ் வரியை ஒரு சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக உயர்த்தி நலவாரிய பயன்களை அதிகரித்திட வேண்டும். மாநில உரிமைகளுக்கானப் போராட்டம் அவசியமானது. அதேவேளை, உழைக்கும் மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை முறியடிப்பதும் அவசியமானதாகும். 

காவல்துறை அராஜகமும் ஜனநாயக வெளி சுருங்கி வருவதும்

தொழிலாளர் போராட்டங்களில் காவல் துறையின் தலையீடு கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தபோதிலும் காவல்துறையின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. பொதுவாக தொழிலாளர் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. போராட்டம் நடக்கும் போது தொழிற்சங்க தலைவர்களை கைது செய்வதும் குண்டுக் கட்டாக தூக்கி சிறையில் அடைப்பதும் நடந்து வருகிறது.

பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதற்குதான் போராட்டங்கள் நடத்தப்படு கின்றன. ஆனால், போராட்டம் நடத்த மக்கள் நடமாட்டமே இல்லாத இட ங்களில்தான் அனுமதி என்ற நிலை திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. காவல்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்ற பெயரில் ஜனநாயகப் போராட்டங்கள் ஒடுக்கப்படக்கூடாது.

சமூக நீதியை நிலை நிறுத்த பொருளாதார நீதியும் தேவை.

தமிழக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதி அளித்த படி 10 ஆண்டுக்கு மேலாக நிரந்தரமற்ற வேலைகளில் பணி புரிந்து கொண்டிருப்ப வர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களைப் பணி வரன்முறை செய்ய வேண்டும். தனியார்மயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கவுரவமான ஊதியமும், கண்ணியமான பணி நிலைமையும் பெறுவர். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங் களில் 90% பணியிடங்கள் தமிழ்நாடு மக்களுக்கே வழங்க வேண்டும். அப்போது மட்டுமே சமூக நீதி சாத்தியம்.

குடியிருப்பை அடிப்படை உரிமையாக்குக!

கிராமப்புற வறியவர்களுக்கு வீட்டுமனையும் வீடு கட்ட மானியமும் வழங்க வேண்டும். நகர்ப்புற வறியவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு பீடி சிகார் சட்டத்தின் படி வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரிலோ அல்லது பொலிவுறு நகர் பெயரிலோ அல்லது ஆக்கிரமிப்பு அகற்றம் என்றோ வசதியான மாற்று ஏற்பாடு இல்லாமல் நகரத்தை கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களை அவர்கள் குடியிருப்பு களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது. தமிழக உழைக்கும் மக்கள் எவ்வளவு மோசமான பணி சூழலுக்கு வறுமையின் காரணமாக தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு தொடர்ந்து நடக்கும் பட்டாசு ஆலை விபத்துக்கள் ரத்தச்சாட்சியாக இருக்கின்றன.

ஏஐசிசிடியு பத்தாவது மாநில மாநாடு தமிழக உழைக்கும் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும், அதற்குத் தீர்வு காணும் மாநாடாக அமையும்.

பாசிச மோடி ஆட்சியை தோற்கடிப்போம்! 

கார்ப்பரேட் தாக்குதலை முறியடிப்போம்! 

வெறுப்பு அரசியலை வேரறுப்போம்! 

தொழிலாளர் உரிமை இயக்கத்தை வலுப்படுத்துவோம்! 

போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தை கட்டி எழுப்புவோம்!