இகக (மாலெ) திருச்சி மாவட்டக்குழு உறுப்பினரும் ஏஐசிசிடியு மாநிலப் செயற்குழு உறுப்பினருமான தோழர் மகேந்திரன் சாலை விபத்தில் சிகிச்சை பலன் இன்றி 11.8.2022 அன்று மரணமடைந்தார். அவரது இறப்பு கட்சி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழர் மகேந்திரன் இகக(மாலெ) கட்சியில் ஆரம்ப காலத்தில் முழுநேர கட்சிப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் குடிநீர் வடிகால் வாரியத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணியாற்றி வந்தார். தோழர் மகேந்திரன் பெரம்பலூர் மாவட்ட ஏஐகேஎம் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 12.8.2022 திருச்சியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் சந்திரமோகன், தோழர் ஆசைத் தம்பி, மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் தனவேல், ராமசந்திரன், கண்ணையன், மதிவாணன், ஊராட்சித் தலைவர் ராஜாங்கம், ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகன், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணவேணி, கர்நாடகா மாநிலப் பொறுப்பாளர் தோழர் காந்திமதி, அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் சக்திவேல், ராஜ்குமார், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் பாலு மற்றும் பாரதி, அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவரது உறுப்புக்கள் மருத்துவமனைக்கு கொடையளிக்கப்பட்ட பின் அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பூமாலை அணிவித்து கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.