நிச்சயமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தத்தக்க பாஜகவின் குஜராத் வெற்றியின் அளவு தவிர, குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல், டெல்லியின் நகர்மன்ற தேர்தலின் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே வெளிவந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தான் ஆட்சியில் இருந்த கட்சியாகும். தற்போது இரண்டில் அது ஆட்சியை இழந்துள்ளது. இந்த அர்த்தத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது எனலாம். ஆனால் வாக்கின் பங்கு (52 சதத்திற்கும் மேல்), இடங்களின் பங்கு (85 சதத்திற்கும் மேல்) ஆகிய இரண்டு அளவுகளின் படி குஜராத்தில் அது பெற்ற வெற்றி அதன் தோல்வி மீது நிழலாக படிந்து அதனை மறைத்து விட்டது. பாஜக தோல்வியுற்ற இமாச்சல், டெல்லியிலும் அது நெருக்கமான இரண்டாவது இடத்தை பிடித்தது என்பதையும் நாம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். குஜராத்தில் காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத பேரடியால் பாதிக்கப்பட்டது. அதன் எண்ணிக்கை 77 லில் இருந்து 17 ஆக குறைந்து விட்டது. ஆனால் குறைவான இடைவெளியே என்றாலும் பாஜகவிடமிருந்து இமாச்சலை கைப்பற்றுவதில் அது வெற்றி பெற்றது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி என்ற புதிதாக கிடைத்த தகுதியும் தான் அதன் உண்மையான ஆதாயம் ஆகும்.

இமாச்சல் பிரதேசத்திலும், டெல்லி மாநகராட்சியிலும் அதனுடைய தோல்வியின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டுவதில் பாஜக தற்போது தீவிரமாக உள்ளது. ஆனாலும் இந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறவேண்டும் என்ற முயற்சியில் பாஜக சிறு துரும்பையும் விட்டு வைக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். டெல்லி மாநகராட்சியில் அது 15 வருட நீண்ட செயல்படாத பதவிக்காலத்திற்கு எதிராக பொதுமக்களின் கோபம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அந்த கட்சி நன்கு அறிந்திருந்தது. எனவே டெல்லி மாநகராட்சி மீதான தனது பிடியை தக்க வைத்திட தொடர்ச்சியான ஏமாற்று வித்தைகளை அது மேற்கொண்டது. 2014 இல் மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்தே தாக்குதல் மிக்க மத்திய அரசாங்கத்திற்கும், இணையான நகராட்சி அதிகாரத்திற்கும் இடையே மாட்டிவிடப்பட்ட டெல்லி மாநிலத்தை புகழுக்குரியதான வெறும் மாநகராட்சியாக கீழிறக்க முயற்சித்து கொண்டிருக்கிறது. மாநில அரசாங்கத்திற்கு உட்பட்ட நகராட்சி அதிகாரத்தின் தகுதி நிலையை உயர்த்துவதற்காக மூன்று மாநகராட்சிகளும் மையப்படுத்தபட்டு ஒரே அமைப்பாக்கப்பட்டன. மேலும், தொகுதிகளை மறு நிர்ணயம் செய்வதன் மூலமாக அதன் வார்டுகள் மறுசீரமைக்கப்பட்டு பாஜகவின் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டது. தேர்தல் கால அட்டவணையும் அதிகபட்ச மோசடியுடன் திட்டமிடப்பட்டு, குஜராத் தேர்தல்களுடன் ஒத்துப்போகும் வண்ணம் அதன் தேர்தல் தேதிகளும் குறைந்த கால அவகாசத்தில் திடீரென அறிவிக்கப்பட்டன.

பாஜக அதன் அனைத்து நிதி ஆதாரங்கள், நிர்வாக அதிகாரம், வெறுப்புமிக்க மதவெறி, தாக்குதல் தன்மை கொண்ட பரப்புரைகள், மோடியின் கவர்ச்சி ஆகியவற்றை இந்தத் தேர்தல்களில் பயன்படுத்தியது. இமாச்சலத்திலும் டெல்லியிலும் பாஜகவின் தோல்வியை இந்தப் பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டும். இமாச்சலப் பிரதேசத்தில் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடு, போட்டி வேட்பாளர்களின் எண்ணிக் கையை அறிந்த மோடி, வெளிப்படையாக தனது சொந்த பெயரிலேயே வாக்குகளை கேட்டார். ஆனாலும், கோபமடைந்த இமாச்சல் வாக்காளர்கள் பாஜகவை தங்கள் வாக்குகளின் மூலம் தோற்கடிப்பதை உறுதி செய்தனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா, வெறுப்பை தூண்டும் மோடியின் அதீத கவனம் ஈர்க்கும் அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரின் சொந்த மாநிலம் இமாச்சல் ஆகும். அதிகரித்த ஆப்பிள் இறக்குமதி, ஆப்பிள்களை அட்டை பெட்டிகளில் அடைத்தல் மீதான ஜிஎஸ்டி வரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நெருக்கடியில் தத்தளிக்கும் இமாச்சல் ஆப்பிள் விவசாயிகளின் அவல நிலை; பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எல்லா இடங்களிலும் பெருகி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கை; ராணுவத்தில் பாதுகாப்பான எதிர்காலம் தேடும் இளைஞர்களின் வாய்ப்பை பறித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கொதித்தெழுந்த இளைஞர்களின் கோபம் மோடியின் வெற்று வாய்வீச்சிற்கும் மேலாக இந்த உண்மையான பிரச்சினைகளே ஆதிக்கம் செலுத்தின. ஆக, பாஜக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இமாச்சலிலும் டெல்லியிலும் காணப்பட்ட தேர்தல் போக்குகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக குஜராத் தேர்தல் முடிவுகள் தெளிவாகவே வெளியாகி உள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக ஏற்கனவே 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது எனும்போது, இந்த மாறுபட்ட புதிரை எவ்வாறு விளக்குவது? மோடி காலத்தில் குஜராத் பாஜகவின் மிகவும் வலுவான கோட்டையாக இருந்தது என்பது உண்மைதான். இது சங்கப் படைப்பிரிவின் மிகப்பெரிய வகுப்புவாத ஆய்வுக்கூடம் மட்டுமல்ல, அதானி அம்பானியின் சொந்த மாநிலமும் ஆகும். தேர்தலுக்கு சற்று முன்னதாக மகாராஷ்டிராவின் இழப்பில் குஜராத்திற்கு சில பெரிய முதலீட்டு திட்டங்களை மோடி அறிவித்தார். குறிப்பாக 2017 தேர்தலின் நட்சத்திரப் பரப்புரையாளர் ஹர்திக் படேல் போன்றவர்களின் தொடர் விலகல்களால் வலுவிழந்த காங்கிரஸ், புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குறைவான பரப்புரையை நடத்தியது. ஆம் ஆத்மி கட்சி இந்தச் சூழலை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டும், சூரத்தில் நடந்த நகராட்சித் தேர்தல்களில் ஊக்கமளிக்கும் வகையில் அதுபெற்ற முடிவுகள், பஞ்சாபில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பெற்ற அற்புதமான வெற்றி ஆகியவற்றால் உற்சாகமடைந்தும், பாஜகவின் தொடர்ச்சியான ஆட்சிக்கு வரவிருக்கும் சவாலாகத் தன்னைக் காட்டிக் கொள்ள தன்னால் இயன்றவரை அது முயற்சித்தது. குறிப்பாக, குஜராத்தின் பழங்குடியின பகுதிகள் போன்ற காங்கிரசின் பாரம்பரிய அடித்தளத்தின் இழப்பில்தான் ஆம் ஆத்மி கட்சி வாக்குகள் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. பாஜக அல்லாத வாக்குகளில் ஏற்பட்ட இந்தப் பிரிவினால் பாஜக பெரிதும் பயனடைந்தது.

எப்படி இருப்பினும், பாஜக அல்லாத வாக்குகளில் உள்ள பிரிவினை பாஜகவிற்கு சாதகமாக 5 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதன் புதிரை விளக்க முடியாது. குறிப்பாக இரண்டாம் கட்டத்தில், வாக்களிப்பின் கடைசி மணி நேர அதிகரிப்பு என்னும் பிரச்சினை, தீவிர சந்தேகங்களை எழுப்புகிறது. ஆக, இந்திய தேர்தல் ஆணையம் இந்த பிரச்சினையை கண்டிப்பாக விசாரணை செய்து நம்பத்தகுந்த பதிலை அளிக்க வேண்டும். டிசம்பர் 5 இல் 16 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கடைசி மணி நேரத்தில் பதிவாகியுள்ளன. சராசரியாக 6.5 சதவீதம் திடீர் அதிகரிப்பும், ஒருசில தொகுதிகளில் 10 சதவீதம் அதிகரிப்பும் நிகழ்ந்துள்ளன. வாக்கு மையங்களின் வெளியே நீண்ட வரிசை இருந்ததற்கான எந்தவொரு நேரடி அறிகுறியும் இல்லை. இருப்பினும், ஒவ்வொரு வாக்குகளுக்குமான இடைவெளி மிகக் குறைவாக 30 விநாடிகள் மட்டுமே இருந்து, வாக்களிப்பில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திர கணக்குகளில் பதிவாகியுள்ளது! உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது போல, தேர்தல் ஆணையம் பொறுக்கியெடுக்கப்பட்ட அதிகாரிகளால் நிரப்பப்பட்டிருப்பதன் காரணமாக தேர்தல் நிறுவனங்களின் நேர்மை, அவற்றின் தன்னாட்சி அதிகாரம், தேர்தல் நடத்தப்படும் முறை ஆகியவற்றில் பாரதூரமான அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது; இந்திய தேர்தல் முறை மேலும் மேலும் சந்தேகத்துக்கு உரியதாக மாறி வருகிறது.

கடந்த காலங்களில் அவர்களில் பலரும் பாஜகவுடன் தொடர்பிலிருந்தனர். ஆம் ஆத்மி கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர்களிடையே கட்சித் தாவலை நிகழ்த்திட பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சமிஞ்கைகளை குஜராத்தில் இருந்து வரும் செய்திகள் தருகின்றன. முதன்மையாக காங்கிரசின் வீழ்ச்சியிலே இதுவரையிலும் ஆம் ஆத்மி கட்சி வளர்ந்திருக்கலாம். ஆனால் தற்போது அது தேசிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. பாஜகவின் பாசிச தாக்குதலை எதிர்த்து நிற்கும் விருப்பமும் வலிமையும் இருந்தால் மட்டுமே அது தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். குஜராத்தில் காங்கிரஸ் படு மோசமாக செயல்பட்டுள்ளது. ஆனால், சங்கப்படையின் வகுப்புவாத பாசிச தாக்குதலுக்கு எதிராக ஆற்றல்மிகு மக்கள் எதிர்ப்பை கட்டுவதற்கு தீர்மானகரமாக உள்ள அனைவருக்கும், கடுமையாக போராடிப் பெற்ற ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி உத்வேகமூட்டும் சமிஞ்கைகளை கொண்டிருக்கிறது. வடகிழக்கில் திரிபுராவில் இருந்து தெற்கில் கர்நாடகா வரையிலும், அடுத்த வருடம் முக்கியமான சட்டமன்ற தேர்தல்கள் வர இருக்கின்றன. 2024இல் வாக்களித்து அதனை வெளியேற்றுவதற்கு முன்பாக, இந்தியா மோடி ஆட்சிக்கு பல்வேறு பேரடிகளை கொடுக்கவேண்டும்.