தஞ்சையில் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு

ஜூலை24. 22 ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணியளவில் , தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு, காவேரி திருமண மண்டபத்தில் (தோழர்கள். சந்திரகுமார்- சந்திரசேகர்- சுப்பு நினைவு அரங்கம்) "காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டை , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை, CPIML Liberation நடத்தியது.

மாவட்ட செயலாளர் T.K. கண்ணையன் வரவேற்புரை ஆற்றினார். கோவை நிமிர்வு கலையகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

சிபிஐ-எம்எல் கட்சி மாநில செயலாளர் தோழர். N.K. நடராஜன் தலைமை தாங்கினார். சிபிஐ-எம்எல் கட்சி பொதுச் செயலாளர் தோழர்.திபங்கர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர். உ.வாசுகி, சிபிஐ கட்சி மாநில நிர்வாகி தோழர். பெரியசாமி Ex.MLA, பச்சை தமிழகம் கட்சி அமைப்பாளர் தோழர்.சுப.உதயகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில நிர்வாகி விடுதலை அரசு மற்றும் சிபிஐ-எம்எல் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர்.வீ.சங்கர், மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள். சி. பாலசுந்தரம், சோ.பாலசுப்பிரமணியன், சந்திரமோகன், பழ. ஆசைத்தம்பி எனப் பலரும் உரையாற்றினார்கள்.

மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. (தீர்மானங்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன).

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1) தமிழ்நாட்டிலும் காவிப்பாசிச கூக்குரல்கள் அதிகரித்து வரும் வேளையில், இகக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப்பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த *சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றியையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திரளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

2) "மோடி அரசாங்கத்தை ஆட்சியை விட்டு வெளியேற்ற வேண்டிய தேசிய அரசியல் கடமையில் தமிழ்நாட்டு மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒன்றுபட்டு பணியாற்றுவோம்!"

எட்டு ஆண்டுகால கார்ப்பரேட்-காவிப் பாசிச மோடி ஆட்சி, இந்திய அரசமைப்பு சட்டத்துக்கும் அதன் அறநெறிகளான சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி போன்றவற்றுக்கும் இந்தியாவின் பல்வண்ண, இன, மொழி, பண்பாட்டு வேற்றுமைகளின் ஊடே அடையப்பட்ட இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் அதானி, அம்பானி போன்ற பெரும்தொழில் குழும அதிபர்கள் கைகளில் ஒப்படைத்து, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீரழித்து ரூபாயின் மதிப்பை என்றுமில்லாத அளவுக்கு கீழேசரியும் மீளமுடியாத நிலைக்கு தள்ளிவிட்டது மோடி ஆட்சி! கண்மூடித்தனமான தனியார்மயமாக்கம் தேசவளத்தை சூறையாடுவதோடு மட்டுமின்றி நாட்டுமக்களின் வாழ்வை நாசமாக்கி வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம் என்றுமில்லாத உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில் ஒன்றிய அரசில் மட்டுமே 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களைக்கூட நிரப்ப மறுக்கிறது. தேசப்பாதுகாப்பையும் வேலைப்பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக லட்சோப லட்ச இளைஞர்களின் வீறுகொண்ட போராட்டத்துக்குப் பிறகும் சர்வாதிகாரமாக அந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. "இசுலாமியர் மற்றும் தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள், அவர்களின் குடிசைகள், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு அழிப்பது, குடிமக்கள் சட்டதிருத்தங்கள் மூலமாக இலட்சக்கணக்கான இசுலாமியர்களை நாடற்றவர்களாக ஆக்குவது என மோடி அரசாங்கம் ஒரு பாசிச ஆட்சியையே நடத்தி வருகிறது.

கல்வி, மருத்துவம், விவசாயம், வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) மூலமாக மாநில நிதி ஆதாரங்களை அபகரித்துக்கொண்டதோடு மாநில உரிமைகளையும் அபகரித்துக் கொண்டு மாநில ஆட்சிகளை செல்லாக் காசாக மாற்றி; கூட்டாட்சி முறையை சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றையாட்சி முறையை திணிக்கிறது.

ஒட்டுமொத்தத்தில்,ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்துமதத்தை ராணுவமயமாக்குவது, ராணுவத்தை இந்துமயமாக்குவது எனும் இந்து ராஷ்ட்ரா திட்டத்தை முறியடிக்க வேண்டியது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரது கடமையாகும். எனவே, மோடி அரசாங்கத்தை 2024 பொதுத் தேர்தலில் ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தமிழ்நாட்டு மக்களின் கடமை ஆகிறது. ”மோடி அரசாங்கத்தை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம்!" என்ற முழக்கம் வலுவான மக்கள் இயக்கமாக மாறிட, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டுமென, காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு அழைப்பு விடுக்கிறது.

3) தமிழ்நாட்டின், சாதிஒழிப்பு, பகுத்தறிவு, முற்போக்கு மரபுக்கு எதிரான பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்களின் மூர்க்கத்தனமான முயற்சிகளை முறியடிக்க, கல்வி, வேலைவாய்ப்பு, நிலம், சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சிக்கான போராட்டங்களை முன்னெடுக்க மார்க்சியர்கள், அம்பேத்கரியர்கள், பெரியார் உணர்வாளர்கள் ஒன்றுபட்டு செயல்படவும் பாசிச எதிர்ப்பு போரில் அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்ட மாநாடு அழைப்பு விடுக்கிறது.

4)கண்மூடித்தனமான தனியார்மயமாக்கத்தை முன்னெடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மோடி ஆட்சி, மாநில ஆட்சிகளையும் அச்சுறுத்தி தனியார் மயமாக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறது. திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். மத்திய அரசின் அச்சுறுத்தலுக்குப் தமிழக அரசு பணியக்கூடாது. மின்கட்டண உயர்வு, நுகர்பொருள் வாணிபக் கழகம், போக்குவரத்து உள்ளிட்ட எந்த துறையிலும் தனியார் மயமாக்கத்தை கொண்டுவரக் கூடாது என மாநாடு வலியுறுத்துகிறது.

5) ஒன்றியமோடி அரசின் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ஏற்று விதிகள் உருவாக்கியுள்ளதை திமுக அரசு கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும் சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

6)கார்ப்பரேட்டுகளுக்கு தேவையானவர்களை உருவாக்கிடவும், நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானதும் தமிழ்நாட்டின், மொழி உரிமை போராட்டத்தால் உருவான இருமொழிக்கொள்கைக்கு எதிரானதுமான தேசிய புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டுமென பேசிவரும் தமிழக, புதுச்சேரி ஆளுநர்களை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்கும் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும். நீட், க்யூட் உள்ளிட் மய்யப் படுத்தப்பட்ட தேர்வு முறைகளை கைவிட வேண்டுமென்றும் ஒன்றிய அரசை மாநாடு வற்புறுத்துகிறது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்விக் குழு விரைந்து கல்விக் கொள்கையை உருவாக்கிட வேண்டும். உருவாக்கப்படும் கல்விக் கொள்கை அனைத்துமட்டத்திலும் அறிவியல் கண்ணோட்டத்தையும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி வழங்குவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்துகிறது.

7) மோடியின் அலங்கார பேச்சுக்கு மாறாக அரிசி, தயிர் உள்ளிட்ட பெரும்பாலான உணவுப் பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி வரிவிதித்துள்ள ஒன்றிய அரசை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்திட வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்துகிறது.

கள்ளக்குரிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவியின் அதிர்ச்சிதரும் மர்ம மரணத்தின் முடிச்சுகளை விரைந்து விடுவித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டித்து நீதிகிடைக்கச் செய்வதில் திமுக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட வேண்டும். இதுபோன்று மர்ம மரணம், பாலியல் வனமுறை குற்றச்சாட்டு முன்வந்துள்ள பள்ளிகளிலும் விரைந்து வழக்கை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். கனியாமூர் பள்ளியில் நடந்த கண்டனத்துக்குரிய வன்முறையை காரணம் காட்டி கலவரக்காரர்கள் என்று முத்திரை குத்தி கைதுசெய்வதை அரசு கைவிடவேண்டும். அப்பாவிகள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும். இளைஞர் பெருமளவு திரண்டிருப்பது குற்றமயமாகிக் கொண்டிருக்கும் கல்விமுறைமீது கொண்டிருக்கும் கோபத்தையேக் காட்டுகிறது. வன்முறையின் மீது கவனத்தை திசைதிருப்பிடுவதற்கு மாறாக, தாறுமாறான கட்டணக் கொள்ளையடிக்கும் மெட்ரிக், சிபிஎஸ்ஈ (சர்வதேச) பள்ளிகளின் குற்றங்கள் மீது கவனம் செலுத்தும் வேண்டும். இதுபோன்ற மர்ம மரணங்களும் பாலியல் வன்கொடுமைகளும் இத்தகைய பள்ளிகளில்தான் நடக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

(கனியாமூர் பள்ளி அனுமதி பெறாமலேயே பள்ளிக்கூட மேல்மாடியிலேயே விடுதி நடத்தி வந்த து கண்கூடான முறைகேடு) தான் இத்தகைய கடும் குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. எனவே, மெட்ரிக், சிபிஎஸ்ஈ தனியார் பள்ளிகள் அனைத்தையும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை படிப்படியாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது.

9) மோடி ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா(ஸ்வாச் பாரத்), ஜல்ஜீவன் திட்டங்கள், பெரும் ஊழல், முறைகேட்டுக்கும் இயற்கை வளக் கொள்ளைக்குமே வழிகோலியுள்ளன. கிராமப்புர வறியவர்களின் வேலைவாய்ப்புத் திட்டமான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் மோடி ஆட்சி சீர்குலைத்து வருகிறது. கணிசமாக நிதியைக் குறைத்து வேலைசெய்வோர் எண்ணிக்கை, வேலை செய்யும் நாட்களைக் குறைத்து இந்த திட்டத்தையே ஒழித்துக் கட்ட முற்படுவதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 200 நாள் வேலை, ரூ 600 நாட்கூலி, வழங்கப்பட வேண்டும். இதற்கேற்ப அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாநாடு வற்புறுத்துகிறது. அசுரத்தனமான வேலைஇல்லா திண்டாட்டத்தை ஓரளவேனும் தணிக்கும் வகையில் நகர்ப்புர வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துகிறது.

அகில இந்திய, இடதுசாரி விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள ஆகஸ்டு 1 போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு மாநாடு அழைப்பு விடுக்கிறது.

9) 130 நாட்களாக வீரஞ்செறிந்த போராட்டம் நடத்திவரும் எஅய்சிசிடியூ தலைமையிலான புதுச்சேரி எல் அண்ட் டி தொழிலாளர் போராட்டத்தை வரவேற்று பாராட்டுகிறது. புதுச்சேரி என்ஆர் காங்-பாஜக கூட்டணி அரசாங்கம், எல் அண்ட் டி தொழிலாளரது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டு வேலைநிறுத்த த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

10) தமிழக மக்கள், குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு ஆபத்தான, சுற்றுச் சூழலுக்கு பேராபத்தான கூடங்குளம் அணுஉலைப் பூங்காவை மூடவேண்டும், அணுக்கழிவுகளை அங்கேயே புதைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிக்க வேண்டும். ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப் படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக வழக்குகள் நீடிக்கின்றன. அவற்றை உடனடியாக முழுவதுமாக திரும்பப் பெற வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

11) தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் ஆட்சிமுறையாலும் ஒட்டுமொத்த வாழ்வாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள இலங்கை மக்கள், இன, மொழி, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து பல மாதங்களாக நடத்தி வரும் போராட்டத்தை மாநாடு வரவேற்று ஆதரிக்கிறது. இலங்கையின் மக்கள் போராட்டங்கள், உலகம்முழுவதுமுள்ள தவறான ஆட்சியாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. கடும் அரசியல் கொந்தளிப்பையும் தடுமாற்றத்தையும் எதிர் கொண்ட ஆட்சியாளர்கள், ராணுவ அடக்கு முறை மூலம் போராட்ங்களை ஒடுக்க முனைவதை கண்டிக்கிறது. இந்திய அரசு, இலங்கை ஆட்சியாளர்களுடன் நிற்பதற்கு பதிலாக மக்கள் போராட்டம், உணர்வை அனுசரித்து ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துகிறது.

12) கிராமப்புர நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு மாநில அரசு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கிட வேண்டும். அபகரிக்கப்பட்டுள்ள லட்சக் கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கோவில், மட நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு அந்த நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும். அவற்றில் பயிரிடும் விவசாயிகளுக்கே குத்தகை உரிமை வழங்கிட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

கிராமப்புர வறிய குடும்பங்களுக்கு வீட்டுமனை, வீடு, கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதுடன், கிராமப்புர, நகர்ப்புர

பெண்களை வாட்டி வதைக்கும் வறிய குடும்பங்களின் தனியார் நுண்கடன்களை தள்ளுபடி செய்வதோடு சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கந்துவட்டிகடன் தடுப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துகிறது.