ஜூலை28 2022 நக்சல்பாரி எழுச்சியின் சிற்பி தோழர் சாருமஜும்தார் தியாகியானதன் 50வது ஆண்டு நினைவுநாள்

சிபிஐ(எம்-எல்) உறுதிமொழி!

பதினோராவது கட்சிக்காங்கிரசை மாபெரும் வெற்றிபெறச் செய்ய அனைத்தும் தழுவிய முயற்சிகளை கட்டவிழ்த்து விடுவோம்!

ஜூலை 28, 2022, நக்சல்பாரி எழுச்சியின் மாபெரும் சிற்பியும் இகக(மா லெ)வின் நிறுவன பொதுச் செயலாளருமான தோழர் சாருமஜும்தார் தியாகியானதன் 50வது ஆண்டு. இந்திய கம்யூனிச இயக்கத்துக்கு அவரளித்த புகழ்வாய்ந்த பங்களிப்பிலிருந்து உத்வேகம் பெறுவதற்கான தருணமிது. இன்றைய சவால்மிக்க சூழலில் அதற்கே உரித்தான முறையில் பங்காற்றத் தக்கவாறு அவரது கட்சியை வலுப்படுத்திடவும் அணியப் படுத்தவுமான தருணமுமாகும்.

தோழர் சாருமஜும்தார், இகக விலும் இககமா விலும் வி்வசாய இயக்கத்தின் அர்ப்பணிப்புமிக்க கம்யூனிஸ்ட் அமைப்பாளராக பலஆண்டுகள் பணிபுரிந்தார். பிரிக்கப்படாத வங்கத்தில், 1940களின் பிற்பகுதியில், ஒடுக்கப்பட்ட விவசாய சமூகத்தை ஒன்றுபடுத்திய, அந்த காலத்து நிலப்பிரபுத்துவம், காலனியம், மதவாதம் ஆகிய மூன்று முக்கிய தடைகளுக்கு எதிராக மாபெரும் முற்போக்கான விழிப்புணர்வால் உள்ளூக்கம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தெபகா (விவசாயிகள்) இயக்கத்தின் கருவான அமைப்பாளர்களுள் ஒருவராக சாருமஜும்தார் விளங்கினார். சுதந்திரத்துக்குப் பிந்தைய விவசாய, பொருளாதார நெருக்கடி எனும் சூழலில், தெபகா உணர்வையும் மரபையும் புத்துயிர் பெறச் செய்வதற்கான நீடித்த, அமைப்பாக்கப்பட்ட உணர்வுபூர்வமான முயற்சியின் விளைபொருளே நக்சல்பாரி ஆகும்.

தோழர் சாருமஜும்தார் அரசியல் சூழ்நிலையை கூர்மையாக கருத்தூன்றி கவனிப்பவராகவும் இருந்தார். மேலும் வர்க்கப்போராட்டத்தின் அதன் அனைத்து பரிமாணங்கள் பற்றியும் அதிலும் பல சமயங்களில் புறக்கணிக்கப்படும் கருத்தியல்-அரசியல் உள்ளிட்ட அம்சங்களிலும் போதுமான கவனம் செலுத்தியவராக இருந்தார். 1950 களின் பிற்பகுதியில், ஏகாதிபத்தியத்துக்கு எதிராக புரட்சிகர எதிர்தாக்குதலை வளர்ப்பது தொடர்பான பிரச்சனையில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் முக்கிய விவாதங்கள் எழுந்து, அவை இந்திய கம்யூனிஸ்ட்கள் மத்தியில் எதிரொலித்தபோது, சாருமஜும்தார் புரட்சிகர வழியை தொடர்ந்து முன்னெடுப்பவராக ஆனார், 1964 ல் இகக (மா) வில் சேர்ந்து அங்கும் போராட்டத்தை தொடர்ந்தார். 1967, ஒரு திருப்புமுனை மைல்கல் என நிரூபணமானது: மேற்குவங்க காங்கிரசல்லாத கூட்டணி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் முக்கிய சக்தியாக அரசாங்கத்துக்கு வந்திருந்தனர், சாருவும் அவரது தோழர்களும் களத்தில் விவசாய புரட்சிகர போராட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டிருந்தனர்.

தனியொரு எழுச்சி நாடுதழுவிய புரட்சிகர சூறாவளியை உருவாக்கிய பாதையை நக்சல்பாரி எடுத்துக் காட்டியது, தோழர் சாரு தருணத்தைக் கைப்பற்றுவது எவ்வாறு என்பதை நமக்கு காட்டினார். அந்த எழுச்சி, முன்னெப்போதுமில்லாதவாறு மாணவர்- இளைஞர்களுக்கு உத்வேகமூட்டியது, சாருவின் அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கான இளம் செயல்வீரர்கள் நிலமற்ற ஏழைகளுடன் ஒன்றுபட நாட்டுப்புரங்களுக்குச் சென்றனர். இது போராட்டங்களின் புதிய ஒன்றுகுவிப்புக்கும், கருத்துகள், அனுபவங்களின் ஒரு புதிய ஒன்றிணைப்புக்கும் வழிவகுத்தது, இவ்வாறு வர்க்கப் போராட்டமெனும் காட்டுத்தீயில் இகக(மாலெ) பிறந்தது. இந்த புதிய கட்சியை, மிகப்பெரிய அடக்குமுறையிலும் ரத்தவெள்ளத்திலும் மூழ்கடித்து நசுக்க முற்பட்டபோது அத்தகையதொரு கடினமான சூழ்நிலையின் மத்தியில் சாரு மாபெரும் துணிச்சல், நம்பிக்கை, அறிவுக் கூர்மையுடன் வினையாற்றினார்.

சாரு தியாகியாவதற்கு சில நாட்களுக்கு முன் எழுதிய அவரது இறுதிக் குறிப்புகளில், எல்லா வழிகளிலும் கட்சியை உயிரோடு வைத்திருக்குமாறு அவரது தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார், மக்களுடன் மிகநெருங்கிய பிணைப்பை உருவாக்கிக் கொண்டு பின்னடவை (நீந்தி) கடந்து வருமாறும், மக்கள் நலனே, கட்சியின் ஒரே நலன் என்பதை உயர்த்திப்பிடிக்குமாறும், நமது முன்னாளைய எதிராளிகள், எதிர்ப்பாளர்களுடனும் கூட பரந்த இடது, எதிரணி முகாம் என்ற வரையறைக்குள் ஒற்றுமை, ஒத்துழைப்பை வளர்க்குமாறும் கூறியிருந்தார். அவரது இறுதி சொற்கள், அவர் தியாகி ஆனதன் இரண்டாவது ஆண்டில், கட்சி மத்தியக் கமிட்டி தொடங்கி, கட்சியை புனரமைப்பு செய்யுமாறு நம்மை உத்வேகப்படுத்தியது. இந்த 50 ஆண்டுகளில், முற்றூடான அரசு ஒடுக்குமுறை, பிரபுத்துவ, அரசியல் வன்முறை, சில தருணங்களில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவு, கருத்தியல் சவால்களை வெற்றிகொண்டும் கட்சியை முன்னோக்கி செலுத்தி வந்துள்ளோம்.

இன்று, தோழர் சாரு தியாகியானதன் 50வது ஆண்டில், நாம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களது வாழ்வும் வாழ்வாதாரமும் சுதந்திரமும் மிகமோசமான ஆபத்தில் இருப்பது மட்டுமல்ல, மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான இந்தக் குடியரசின் உறுதிப்பாடும் வேகமாக பிய்த்தெறியப்பட்டு வருகிறது, பாசிச இந்து ராஜ்ய கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது. புரட்சி செய்யும் கனவை உண்மையாக்க தோற்றுவிக்கப்பட்ட கட்சியானது, தற்போதுள்ள வரலாறு காணாத பேரழிவின் முன்னிலையில் குடியரசை பாதுகாக்கவும் மறுகட்டுமானம் செய்யவும் தலைமை தாங்கிட வேண்டும். இத்தகைய சவால்மிக்க சூழ்நிலைகளை எதிர்கொள்ள கட்சியை அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் வலுப்படுத்தியாக வேண்டும். இந்த திசையில் அர்ப்பணிப்புமிக்க இயக்கத்தை முன்னெடுப்போம், அது அடுத்த பிப்ரவரியில் பாட்னாவில் நடக்க உள்ள, பதினோராவது கட்சிக்காங்கிரசில் நிறைவுறுவதாக இருக்கும். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஒவ்வொரு கட்சிக் கிளையும் கட்சிக் கமிட்டியும் கட்சிக் காங்கிரசை பெருவெற்றி பெறச்செய்ய இந்த தருணத்தில் எழுந்தாக வேண்டும்.

மத்தியக் கமிட்டி, இகக(மா-லெ)